கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் திருடிய இருவர் கைது!
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரைச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் உற்சவ கால பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவர் கைது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாதுகாப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் வயர்களை துண்டித்து, அதனை திருடி கிளிநொச்சி நோக்கி கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வழியிலேயே மோட்டார் சைக்கிள் இயங்காமல் நின்ற நிலையில், அதனை வீதியில் நிறுத்தியிருந்த போது, உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் தர்மபுரம் பொலிஸார் விரைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் மூலம் கிளிநொச்சி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.