குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணையுங்கள்!பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் தொடர் மின் தடை நெருக்கடி காரணமாக தேவையற்ற குளிரூட்டிகள் மற்றும் மின் விசிறிகளை அணைத்து விட்டு மின்சாரத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
கடந்த சில தினங்களாக அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் அனல் மின் நிலையங்களின் சேவை தடைப்பட்டிருந்ததுடன், மின்தடை நிலவி வரும் நிலையில்,இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இன்று முதல் நாளை மறுதினம் வரை மின்வெட்டுக்கான அவசியமில்லை என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த 3 நாட்களில் மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும்,இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு மசகு எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆம் அலகின் மூலம் இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.