தீவிரமடையும் போர் சூழலின் மத்தியில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு! பதற்றத்தில் ஈரான்
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்தநாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்றையதினம்(11) இடம்பெற்றுள்ளது.
அரசுமுறை பயணம்
ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.
அப்போது, ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்தவேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சிப் படைகளுடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், ஈரான், காசா மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதிரடி நடவடிக்கை
இஸ்ரேலின் பாதுகாப்புத் தேவைகளை நெதன்யாகு விளக்கமாக முன்வைத்ததாகவும், இரு தரப்பும் தொடர்ச்சியான ஒருங்கிணைப்பையும் நெருங்கிய உறவையும் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரானுடன் நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“ஒப்பந்தம் எட்டப்படுமா என்பதை நான் பார்க்க விரும்புகிறேன். அது சாத்தியமானால் அதையே நான் விரும்புகிறேன். இல்லையெனில் அதன் விளைவுகளை நாம் காண வேண்டியிருக்கும்,” என ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஈரானின் அணு தளங்களுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய “Midnight Hammer” தாக்குதலை குறிப்பிட்ட அவர், “அப்போது ஈரான் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை; அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இல்லை,” என்றும் தெரிவித்துள்ளார்.