வெள்ளை மாளிகையில் தயாராகும் யுஎஃப்சி சண்டைக் கூண்டு
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் வழக்கத்திற்கு மாறான ஒரு தற்காலிக கட்டுமானப் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா உருவானதன் 250ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, அடுத்த மாதம் அங்கு நடைபெறவிருக்கும் அல்டிமேட் ஃபைட்டிங் சம்பியன்ஷிப் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டிக்காக, வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளியில் எண்கோண வடிவ சண்டைக் கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனம்
வருகின்ற ஜூன் 14 அன்று நடைபெறவுள்ள இந்த நிகழ்விற்கான இணையவழி மாதிரிப் படங்கள் தற்போதே வெளியாகியுள்ளன.
அதன்படி, கம்பி வேலியால் சூழப்பட்ட இந்த சண்டைக் களத்தைச் சுற்றி அமெரிக்க தேசியக் கொடியின் வண்ணங்களான சிவப்பு, வெள்ளை, நீலம் ஆகிய நிறங்களில் மேடையும், நட்சத்திரங்கள் மற்றும் கோடுகள் கொண்ட பிரம்மாண்ட வளைவும் அமைக்கப்படவுள்ளன.

மேலும், போட்டியை நேரலையாகக் காண இரண்டு பெரிய திரைகளும், இசைக்குழுவினர் மற்றும் பார்வையாளர்களுக்காக சுமார் 5,000 தற்காலிக இருக்கைகளும் வெள்ளை மாளிகையின் வாசலிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றன.
1776 ஜூலை 4இல் அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தானதை முன்னிட்டு 250ஆவது ஆண்டைக் கொண்டாடும் தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாகவே இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இது தவிர, வெள்ளை மாளிகை வழியாகச் செல்லும் இண்டிகார் பந்தயம் மற்றும் நேஷனல் மால் பகுதியில் மாபெரும் கண்காட்சி ஆகியவற்றுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
போட்டிகள்
இந்த யுஎஃப்சி போட்டிக்கான இலவச டிக்கெட்டுகளைப் பெற மக்கள் மத்தியில் வரலாறு காணாத அளவில் ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் பல்வேறு அதிரடி கட்டுமான மாற்றங்களின் வரிசையில் இந்த தற்காலிக விளையாட்டு அரங்கமும் இணைந்துள்ளது.

முன்னதாக, வெள்ளை மாளிகையின் புகழ்பெற்ற ரோஜா தோட்டத்தை மாற்றி அமைத்தது, புதிய நடன அரங்கம் கட்டியது மற்றும் லிங்கன் நினைவிடத்திற்கு அருகில் 250 அடி உயர வளைவு அமைக்கத் திட்டமிட்டுள்ளது என வெள்ளை மாளிகையில் ட்ரம்பின் கட்டுமான ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.
தற்போது அமையவுள்ள இந்த புதிய களத்தில், பிரேசிலின் அலெக்ஸ் பெரேரா மற்றும் பிரான்சின் சிரில் கான் ஆகியோருக்கு இடையேயான ஹெவிவெயிட் சம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்ட முக்கியப் போட்டிகள் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.