திடீரென தீப்பற்றி எரிந்த தொடருந்து இயந்திரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை
திருகோணமலை தொடருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொடருந்து என்ஜின் இயந்திரம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்றையதினம் (08.04.2026) இடம்பெற்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, இன்று காலை திருகோணமலை தொடருந்து நிலைய வளாகத்தில் தரித்து வைக்கப்பட்டிருந்த என்ஜின் இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென புகை கிளம்பியுள்ளது.
தீப்பற்றியதற்கான காரணம்
அதனைத் தொடர்ந்து என்ஜின் பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது.
இதனை அவதானித்த தொடருந்து நிலைய ஊழியர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனடியாகச் செயற்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர்.

சுமார் 60 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள இயந்திரத்தில் திடீரென தீப் பரவியமைக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
அறிக்கை
தூரப்பகுதிகளில் இருந்து நிலையத்திற்கு வரும் தொடருந்துகளை நிலைய எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்தும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இயந்திரம், இன்று மதியம் கொழும்பிலிருந்து வந்த தொடருந்து பெட்டிகளை இடமாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நிலைய அதிபர் எஸ். சர்வேஸ்வரன், தீயணைப்பு துறையினரின் அறிக்கை விரைவில் கிடைக்கும் என தெரிவித்தார்.
மின் கசிவு
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், தொடருந்து திணைக்களத்தின் தொழில்நுட்பக் குழுவினர் இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தில் தொடருந்து இயந்திரம் பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலதிக தகவல்- யூசுப்




100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri