திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி.சீ.ஆர் இல்லை - மக்கள் மிகவும் அவதி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் பி .சீ.ஆர் இயந்திரம் கூட இல்லை எனவும் இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும் கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் பிரதிநிதி அருண் ஹேமச்சந்திர குற்றம் சாட்டியுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசின் அரசியல்வாதிகளால் அரசாங்கத்தின் போதியளவு பணம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும் கோவிட் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தனவந்தர்களிடம் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு அவசரமாக பொருட்கள் தேவை என கோறியுள்ள நிலையில், மறுபுறத்தில் அரசாங்கத்தினால் வங்கிகளில் சொகுசு வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கு கடன் கோரப்பட்டுள்ளதாகவும் இது ஒரு கூத்தாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
திருகோணமலையில் யாராவது மரணித்தால் அவருடைய சடலத்தை பி.சீ ஆர் பரிசோதனை செய்வதற்காக மட்டக்களப்பிற்கு அனுப்புவதாகவும் அதனுடைய அறிக்கை மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பின்னரே வருவதாகவும் இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பி.சீ.ஆர் இயந்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு தற்போது தனி நபர்களிடம் இருந்து பணம் சேகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர் அரசாங்கத்தின் போதியளவு பணம் இருப்பதாக கூறுவது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.