படகு விபத்து தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம் (VIDEO)
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பொதுச்செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண ஆளுநர் நீதியான விசாரணையை நடத்தி இந்த மாணவர்களுக்கான நஷ்ட ஈடுகளை வழங்கவும் முன்வர வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இவ்வாறான பயணங்களை மேற்கொண்டு பாடசாலைகளுக்கு செல்லும் சூழ்நிலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணசபை நடவடிக்கையெடுக்க வேண்டும்.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பகுதி பகுதியாக மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளுக்கு அழைக்கப்படும் நிலையில் பரீட்சைகளுக்கு மாணவர்களை முழுமையாக அழைக்கும் நிலையுள்ளது.
இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் சுகாதார
வழிமுறைகளையும் சுற்றுநிரூபங்களையும் பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.