திருகோணமலை பொது வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை செய்ய எவரும் இல்லை- நோயாளர்கள் அவதி
திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் பிரிவில் அன்டிஜன் பரிசோதனை செய்ய தாதியர்கள் எவரும் இல்லாமையினால் நோயாளர்கள் மிகவும் அவதியுற்று வருவதாகத் தெரியவருகின்றது.
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினால் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25) பிற்பகல் 12 மணிக்குப் பின்னர் தாதிய உத்தியோகத்தர்கள் எவரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுக்க மாட்டோம் எனத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்குத் தூர இடங்களிலிருந்து வரும் நோயாளர்கள் மற்றும் 1990 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாகக் கொண்டுவரப்படும் நோயாளர்கள் அனுமதிக்கும் இடத்திலேயே பல மணி நேரங்கள் தரித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் நோயாளர் அனுமதிக்கும் இடத்தில் வைத்தியர் நமது கடமையைச் செய்து
வருகின்ற நிலையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை செய்யாமல் வாட்டில்
நோயாளர்களை அனுமதிக்காமல் திருப்பி அனுப்புவதாகவும் நோயாளர்கள்
தெரிவித்துள்ளனர்.


