திருகோணமலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் கையாளப்படவில்லை என குற்றச்சாட்டு
திருகோணமலை மாவட்டத்தில் கோவிட் தடுப்பூசிகள் வழங்குவதற்கான எவ்வித ஏற்பாடுகளும் கையாளப்படவில்லை என கிழக்கு மக்களின் குரல் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயத்தை கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசினால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவிற்கு அரசியல் சாயம் பூசப்படுவதாக குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அரசினால் வழங்கப்படுகின்ற 5000 ரூபா நிவாரண தொகையான கொடுப்பனவு மூதூர் பகுதியில் வழங்கப்படும் போது அங்கு மொட்டு கட்சியின் உறுப்பினர் ஒருவர் அதனை வழங்கியதாக புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோத செயற்பாடு.
மேலும் இந்த 5000 ரூபா கொடுப்பனவில் பல முறைகேடுகளும் நடைபெறுகிறது. குறிப்பாக சமுர்த்தி பயனாளிகளை பொறுத்தவரை குறித்த 5000 ரூபாவில் இருந்து அவர்களது சமுர்த்தி தொகையானது கழிக்கப்பட்டு எஞ்சிய தொகையே மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மோசமான பெருந்தொற்று நிலவுகின்ற காலப்பகுதியில் அரசினால் மக்களுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படும் கொடுப்பனவுகளில் பல வகையான முறைகேடுகள் இடம்பெறுகிறது.
மக்களது வரிப்பணத்தில் அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் அரசியல் சாயம் பூசப்படுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் தடுப்பு மருந்து ஏற்றப்படுகின்ற செயற்பாடில் அளவுக்கு அதிகமான மக்களை ஒன்று திரட்டி பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்படுகின்ற பல நிலமைகள் நாட்டில் உருவாகியுள்ளது.
இது மக்களை ஏமாற்றுகின்ற ஒரு செயற்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
