சர்ச்சைக்குரிய திருகோணமலை கடற்கரை புத்தர் சிலை விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலை கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதிக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணை விவரம் குறித்த வழக்கானது திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்றையதினம் (நவம்பர் 26) நீதிபதி முகம்மட் ஷரீப் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்தரப்பில் எவரும் முன்னிலையாகாத நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தது.
இதன் பின்னரே வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடு
கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் செயற்பாடு குறித்த வழக்கு விசாரணைக்காக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டத்தரணிகள் குழாம் நேற்றைய தினம் (நவம்பர் 25) திருகோணமலைக்கு வருகை தந்து விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தனர்.
கடந்த 16.11.2025 அன்று திருகோணமலை பிரெட்ரிக் கோட்டை வீதியில் கடற்கரை ஓரமாக உள்ள ஸ்ரீசம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரைக்கு சொந்தமானதென குறிப்பிடப்படும் பகுதியில் எவ்வித அனுமதியும் இன்றி இடம்பெற்றது.

கட்டுமான வேலைகள் தொடர்பாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு கோரியிருந்தனர்.
எனினும், இதனை மீறி அன்று இரவு சிலரால் அவ்விடத்தில் புத்தர்சிலை வைக்கப்பட்டது. இதன் பின்னர் அவ்விடத்தில் முறுகல் நிலை தோன்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.