விடுதலைப் புலிகளின் இராணுவ உபகரணங்களைத் தேடி இன்றும் அகழ்வு நடவடிக்கை
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இராணுவ உபகரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களைத் தேடி இன்றும் நான்காவது நாளாக அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நான்காவது நாளாக தொடரும் அகழ்வு பணி
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் பெறுமதியான பொருட்கள் உள்ளிட்ட இராணுவ உபகரங்கணங்கள் புதைத்து வைக்கப்பட்டதாக தெரிவித்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த 23.11.2023ஆம் திகதி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டு இன்று நான்காவது நாளாகவும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















