நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதி கோவிட் சிகிச்சை பிரிவாக மாற்றம்
கோவிட் தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில் மக்களுக்கான சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளுக்காக வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு , வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் ஒரு பகுதியை கோவிட் சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன் மற்றும் நாவற்காடு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் உள்ளிட்டோர் அடங்கிய வைத்தியர்களால் குறித்த சிகிச்சைப் பிரிவை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இங்கு நூறு கட்டில்கள் அமைக்கப்பட்டு நூறு நோயாளர்கள் தங்கி சிகிச்சை
பெறக்கூடியதாக இந்த சிகிச்சைப்பிரிவு அமைந்துள்ளது எனவும், இன்று வரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் திறக்கப்பட்ட கோவிட் சிகிச்சை நிலையங்களில் 667
நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் வகையில் 667 கட்டில்கள் இடப்பட்டுள்ளதென மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி
நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.