தீர்த்த விழாவில் நீராட சென்ற சிறுவனுக்கு நிகழ்ந்த சோகம்(Photos)
கடலலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை - பெரிய நீலாவனை பிரிவிலுள்ள கடற்கரையிலே மாணவன் நேற்று(27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மாணவன்
இந்த சம்பவமானது நேற்றுமுந்தினம்(26) மாலை 3.30 மணியளவில் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள கடற்கரைப்பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தினத்தன்று உயிரிழந்த மாணவன் சக மாணவர்கள் இருவருடன் பெரியதம்பிரான் ஆலய உற்சவ இறுதி நாளான தீர்த்தம் உற்சவத்தின் போது நீராட சென்றுள்ளான்.
மேலும், கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதே மூவரும் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.
இரு மாணவர்கள் உயிர்தப்பிய நிலையில் கரை சேர்ந்துள்ளதுடன் மற்றுமொரு மாணவன் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
காணாமல் போனவர் பெரியநீலாவணை 1 பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இராசநாயகம் சனுஜன் என்ற மாணவன் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மரண விசாரணைக்காக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலம் உடல்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
போதைப்பொருளை ஊசி மூலம் எடுத்து கொண்ட இளைஞர் உயிரிழப்பு |