மட்டக்களப்பில் தீ விபத்து - பொலிஸாரின் அசமந்தபோக்கு என வர்த்தகர் ஒருவர் குற்றச்சாட்டு
மட்டக்களப்பில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் ஆதாரங்கள் கொடுத்தும், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என மட்டக்களப்பு நகர் வர்த்தகர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றைய தினம்(14.01.2026) மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸாரின் அசமந்தம்
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்த எனது ஹோட்டல் தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் எனக்கு கோடிக்கணக்கில் எனக்கு நஸ்டம் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தீ விபத்து தொடர்பில் எனது ஹோட்டலில் பணியாற்றியவர்கள் போதுமான தகவல்களை கொடுத்தார்கள். ஆரம்பத்தில் இதுவொரு மின் ஒழுக்காக இருக்கும் என கருதினோம். ஆனால் வர்த்தக நிலையத்தில் கடமையில் இருப்பவர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகள் எனக்கு சந்தேகத்தை துண்டியது.
இதனையடுத்து, வர்த்தக நிலையத்தில் கடமையாற்றியவர்கள் தங்கியிருந்த வர்த்தக நிலையத்தின் சிசிடிவி கேமராவினை பரீசோதனை செய்த போது அவர்களின் கருத்துகள் எனக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.
கோரிக்கை
இது தொடர்பில், கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் சென்று குறித்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய இறுவெட்டுகளை வழங்கியிருந்தேன். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கூறியிருந்தேன்.
ஆனால் இதுவரையில் எந்தவித விசாரணைகளும் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தானது மின்னொளுக்கினால் ஏற்பட்டதாக மின்சாரசபை அறிக்கை தந்ததாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மின்சாரசபை உள்ள பொறியியலாளரிடம் கேட்டபோது தாங்கள் எந்த அறிக்கையினையும் வழங்கவில்லை என கூறுகிறார்கள்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி செயலகங்களுக்கும் அறிவித்துள்ளேன். எனது ஹோட்டல் எரிக்கப்பட்ட சம்பமானது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு செயற்பாடாகவே இருக்கும் என்ற சந்தேகம் பலமாகவுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.