தமது பலவீனங்களை மறைக்கவே அரசாங்கம் பேரினவாத செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிப்பு, மண்டைதீவு காணி அபகரிப்பு, குருந்தூர்மலை ஆதிசிவன் சூலம் அபகரிப்பு எனத் தொடர்ந்து பேரினவாத நடவடிக்கைகள் அரசினால் முன்னெடுக்கப்படுவதற்கான காரணம் தமது பலவீனங்களை மறைப்பதற்கே எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் கலாநிதி. இ.சிறீஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையின் படி இலங்கை அரசானது கடுமையான பொருளாதாரச் சரிவை அடைந்து வருகின்றது.
இதனால் மக்களின் நாளாந்த வாழ்வை நகர்த்துவதற்கு ஏற்படும் சுமைகளில் மக்களின் கவனம் திரும்பினால் அரசிற்கு எதிரான கடும் விசனத்தை மக்கள் வெளிப்படுத்த முயல்வர்.
அதனை மாற்றுவதற்காகவே தமிழர்களின் மீது சிங்களப் பேரினவாத நடவடிக்கைகளை அரசு முன்னின்று நடாத்தி வருகின்றது.
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கையின் ரூபா கடுமையான பெறுமதியிழப்பை பதிந்து வருகின்றது.
இந்த வருடத்தின் முதலாம் திகதியன்று ஒரு டொலரின் பெறுமதி ரூபா 185. ஆனால் இருபதாம் திகதியன்று ரூபா 195. இவ்வாறான நிலையில் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரச நிர்வாக அதிகாரிகளை விடுத்து நிகழ்த்தப்பட்ட இராணுவமயமாக்கம் தோல்வியடைந்துள்ளது.
பாண் மற்றும் பணிஸ் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அறிக்கையிட்டுள்ளார்.
இந்தநிலையில் இந்த விடயங்களைப் பற்றிச் சிங்கள மக்கள் சிந்திப்பார்களாயின் அது தற்போதைய அரசிற்குப் பெரும் தலையிடியாக அமையும். அதனால் சிங்களப் பேரினவாதத்தைத் தூண்டினால் சிங்கள மக்கள் அப்பேரினவாதச் சூட்டில் குளிர்காய்வார்கள் என அரசாங்கம் தப்புக்கணக்கிட்டு அதற்கேற்ப வடக்கு, கிழக்கு எங்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைச் சடுதியாக முன்னெடுத்துள்ளது.
தொடரும் பேரினவாத நடவடிக்கைகளினால் இந்த நாடு அழிவு நிலைக்கே தள்ளப்பட்டு வருகின்றது.
தமக்கெதிராகத் திரும்பியுள்ள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் காப்பதற்காகப் பல்வேறு போராட்டங்களை அரசின் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.