துருவேறும் கைவிலங்கு நூல்: கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கையளிப்பு
தென்னிலங்கையில் சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாவன நூல் தென்னிந்திய திரைப்பட பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய பாடலாசிரியர் கவிப்பேரரசு 'வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
20 முதல் 30 ஆண்டுகளுக்கும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதில் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் 'மெய்ச் சாட்சியமாகப்' 'துருவேறும் கைவிலங்கு' எனும் இந்த ஆவண நூல் எழுதப்பட்டுள்ளது.

தமிழினம் விடுதலை
இந்த நூலினை அனைத்து தரப்பினரும் கூர்ந்து அவதானிக்க வேண்டியது கால அவசியமாகும்.
அந்த வகையில், "நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலி சுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது" என்கின்ற கனதிமிகு செய்தியினை, "ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்" என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐபிசி தமிழின் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் மில்லர் முழு நீளத் திரைப்படத்தை ஆரம்பித்து வைப்பதற்காக கவிப்பேரரசு வைரமுத்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
இதன்போது கவிஞர் வைரமுத்து அவர்களை, நேரில் சந்தித்த 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது.
இதன்போது நூலினை கையிலேந்திய கவிஞர், "இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக்கதியை பறைசாற்றுகின்றது" என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |