வெள்ளை வானில் வந்தவர்களால் அச்சுறுத்தல்! - முன்னாள் அதிகாரியொருவரால் முறைப்பாடு
அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், வெள்ளை வானில் வந்து தனது வீட்டுக்கு அருகில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் கிருளப்பனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக நுகர்வோர் சேவை அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன (Dushan Gunawardena) தெரிவித்துள்ளார்.
தனது வீட்டுக்கு பின்னால், இருக்கும் வீதியில் கடந்த வியாழக்கிழமை இந்த சந்தேகத்திற்குரிய வெள்ளை வான் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
வீட்டுக்கு பின்னால் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் வாகனம் நிறுத்தப்பட்டதுடன், அதில் இருந்து இறங்கிய நபர் ஒருவர், நுழைவாயிலில் எழுதப்பட்டுள்ள இலக்கத்தை பார்த்து இதுதான் எனக் கூறிச் சென்றதை அயல் வீட்டை சேர்ந்த ஒருவர் கண்டு அது குறித்து தனக்கு அறிவித்தார் எனவும் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு உயிராபத்து இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை தன்னிடம் வாக்குமூலம் ஒன்றை கூட பெறவில்லை எனவும் துஷான் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.