கொழும்பில் அடையாளம் தெரியாத இருவரால் வீதியில் வீசப்பட்ட சடலம்
கொழும்பு வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத இருவர், இறந்த நபர் ஒருவரை பிரதான வீதிக்கு அருகில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (21) காலை 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக அந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, சடலமாக காணப்பட்டவர் அதிகமாக மது அருந்திவிட்டு மயக்கமடைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த நபர்
எனினும், அந்த நேரத்தில் சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது.
குறித்த காணொளிப்பதிவில் நபர் ஒருவர் முச்சக்கர வண்டியை ஓட்டுவதும், மற்றொரு நபர் உடலை தரையில் இழுத்துச் செல்வதும் பதிவாகியுள்ளது.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு வீதியில் கைவிடப்பட்ட நபர் கடவத்தை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நபர் ஏன் சாலையில் கைவிடப்பட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை என்றும், மேலும் முச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டி சாரதியைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |