வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்தியவர்கள் குறித்து வெளியான தகவல்
வெலிக்கடை சிறைச்சாலையின் கூரை மீதேறி போராட்டம் நடத்தி வந்தவர்கள் அதிகாரிகளால், கீழே இறக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் துறைப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க (Chandana Ekanayake) இதனை தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் வெலிக்கடைச் சிறைச்சாலையின் கூரை மீதேறி 20 கைதிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
நீண்ட கால சிறைத்தண்டனைகளை பெற்றுள்ள தமக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
போராட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை 54 பேராக அதிகரித்தது. இதேவேளை நேற்று இந்த போராட்டத்தில் புதிதாக இணைந்து கொண்ட 7 பேரில் ஒருவர் சுகவீனமுள்ளவர் என்பது கண்டறியப்பட்டது.
எனவே கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் உள்ள பொறுப்பை கருத்திற்கொண்டு நேற்று இரவு எவ்வித பிரச்சனைகளும் இன்றி கைதிகள் கீழே இறக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பாலியல் முறைப்பாடுகள் மற்றும் போதைவஸ்து முறைப்பாடுகளை கொண்டவர்களும் அடங்கியிருந்ததாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை (Ranjan Ramanayake) அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுவது
தொடர்பில் எவ்வித கோரிக்கைகளும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.