உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் அனுமதி
கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தில் இறுதியாக இருந்த நிர்வாகத்தை இடைநிறுத்தி ஐந்து பேர் கொண்ட நியமன நிர்வாகத்தைக் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலகம் நியமித்து தொழிலாளர்களை நெருக்கடிக்குள் உள்ளாக்கியுள்ளது என தெரிவித்து உண்ணாவிரதமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
04.01.2021 அன்று கிளிநொச்சி கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் நியமித்த நியமன இயக்குநர் சபையினை இரத்துச்செய்ய வேண்டும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அவர்களின் குடும்ப நிலைமைகளைக் கருதி தற்போதுள்ள இயக்குநர் சபையை மீளவும் இயங்க விடுதல், சங்கத்தின் கிளைக்குழு தேர்தலை நடாத்தி புதிய இயக்குநர் சபையினை உருவாக்குதல் போன்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த 12.01.2021 தொடக்கம் உண்ணாவிரதம் போராட்டத்தில் இரண்டு தொழிலாளிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 9 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் உடற்பாகங்கள் செயலிழக்க ஆரம்பித்துள்ளமையால் உண்ணாவிரத இடத்தில் இன்றையதினம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் உடல் நிலைபற்றி கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் வருகை தந்து பரிசோதித்ததுடன், குறித்த போராட்டத்தினை நிறைவு செய்யுங்கள், உங்களது உடல் உறுப்புக்கள் பாதிப்படையப் போகின்றது என கூறியதை அடுத்து உண்ணாவிரதகாரர்கள் அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றப்பட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகள் இடம்பெற்று வருகின்றது.