மினி சூறாவளியினால் முப்பது வீடுகள் சேதம்
மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் வாகனேரி குடாமுனைக்கல் கிராமத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் முப்பது (30) வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் வாகனேரி குடாமுனைக்கல் கிராமத்தில் ஏற்பட்ட திடீர் சூறாவளி மற்றும் மழை காரணமாக இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதில் இரண்டு (02) வீடுகள் முழுமையாகவும் இருபத்தெட்டு (28) வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளது. இதன்போது மக்கள் அச்சமடைந்த நிலையில் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம் மினி சூறாவளியினால் வீட்டு கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. மினி சூறாவளியினால் எவருக்கும் உயிர் இழப்புக்கள் ஏற்படவில்லை.
இந்நிலைமையை நேரில் கண்டறிவதற்காக இன்று வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தினை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு தெரிவித்தார்.