யாழில் மின்வெட்டு நேரத்தில் இடம்பெற்ற திருட்டு: மூவர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்கள் வெட்டிவிடப்பட்டுள்ளன.
இவ்வாறு மின் தட மின் வயர்களை வெட்டிவிட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு
அதேவேளை இந்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில் சென்ற மின் வயர்கள் வெட்டப்பட்டு களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வயரின் பெறுமதி
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆழியவளை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு திருடப்பட்ட மின் வயர்கள் 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அறிந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பண்ணை உரிமையாளருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வயரின் பெறுமதி சுமார் 10
இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan