தினமும் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரமாக அதிகரிக்கலாம் - மக்களே அவதானம்
அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கையில் தினமும் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என நம்புவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளின் எண்ணிக்கைக்கு அமையவே தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
அடையாளம் காணப்படாது சமூகத்திற்குள் இருக்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையானது இதனை இரண்டு மடங்காக இருக்கலாம் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் போது 20 முதல் 25 வீதமான தொற்றாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
எதிர்காலத்தில் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களில் பெரும்பாலானவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையில்லை எனினும் அவர்களில் 17 வீதமானவர்களுக்கு ஒக்சிஜன் தேவைப்படும்.
17 வீதம் என்பது பெரிய எண்ணிக்கை என்பதால், வைத்தியசாலைகளின் நோயாளிகளின் கொள்ளவு அதிகரிக்கும். இது சம்பந்தமாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோயாளிகள் அதிகரிக்காமல் இருப்பதை தடுக்க வேண்டியது சமூகத்தில் உள்ள அனைவரதும் பொறுப்பு. நாட்டை மூடுவதை மூக்கு மற்றும் வாய்களை மூடிக்கொள்வது இலகுவானது.
வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முககவசத்தை பயன்படுத்துவது போதுமானது எனவும் உபுல் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.