எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் பரவலின் மத்தியில், மழை மற்றும் வெள்ள நிலைமை காரணமாக வரும் வாரங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இயக்குனர் கலாநிதி அருண ஜெயசேகர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது கொழும்பு மாவட்டம் அதிக ஆபத்தில் உள்ளது.ஏனெனில் மூன்றில் ஒரு பங்கு டெங்கு தொற்று கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஏழு மாவட்டங்களை அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளாக தாம் அடையாளம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் வரும் வாரங்களில் டெங்கு . கம்பஹா, களுத்துறை, காலி, ரத்னபுரி , கேகாலை, குருநாகல் மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் பரவக்கூடும் என்று வைத்திய கலாநிதி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும், ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் ஜெயசேகர எச்சரித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மற்றும் நோயாளிகள் பதிவாகியுள்ளனர். மேலும், டெங்கு தொடர்பான நான்கு இறப்புக்கள் பதிவாகியுள்ளன என்றும் ஜெயசேகர கூறினார்.
தொற்றுநோயியல் பிரிவு தகவல்படி, இந்த ஆண்டு நாட்டின் அனைத்து
பகுதிகளிலிருந்தும் 7,932 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
2,344 டெங்கு நோயாளிகளுடன் மேற்கு மாகாணம், ஏனைய மாகாணங்களை விட மிக அதிகமான
தொற்றாளர்களை கொண்டுள்ளது.