ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தேர்தல் மேடைகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயர்கள் அறிக்கையில் இல்லை - ஹர்சன ராஜகருண
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் மேடைகளில் குற்றவாளிகள் எனக் கூறிய நபர்களின் பெயர்கள் அந்த தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் அனைத்து மேடைகளில் அரசாங்கம் பிரதானமாக ஈஸ்டர் தாக்குதல் பற்றியே பேசியது. இந்த தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.
அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிதால் அது மக்கள் ஆவணமாக மாறிவிடும். அரசாங்கம் அதனை இன்னும் செய்யவில்லை.
ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் என ஒவ்வொறு பத்திரிகைகளில் பெயர்கள் வெளியிடப்படுகின்றன. இந்த அறிக்கை இன்னும் பேராயருக்கு வழங்கப்படவில்லை என்பது அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு ஒரு வருடமும் மூன்று மாதங்களும் பூர்த்தியாகியுள்ளது. எனினும் இன்னும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சரியாக நடத்தப்படவில்லை என சட்டமா அதிபரும் தெரிவித்துள்ளார்.
சரியான விசாரணைகளை நடத்தாமல் அந்த தாக்குதலின் குற்றவாளிகள் பெயரிடப்பட்டுள்ளனரா?. இந்த விசாரணைகள் சீர்குலைய காரணம் என்ன? இதன் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றவா? அப்படியில்லை என்றால் அரசியல் உடன்பாடு இருக்கின்றதா?குற்றவாளிகள் என தேர்தல் மேடைகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 20 வது திருத்தச் சட்டம் உட்பட ஏனைய விடயங்களில் அரசாங்கத்திற்கு உதவியுள்ளனர்.
தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காதவர்கள் மற்றும் அந்த தாக்குதலை நடத்துவதில் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசியல்வாதிகளும் இதன் பின்னணியில் இருந்தனர் என தேர்தல் மேடைகளில் கூறினார்கள். எமது அணியினர் மீதும் குற்றம் சுமத்தினர்.
எனினும் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி , பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என செய்திகளில் காணமுடிகின்றது.
ஆனால் இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் பற்றி எந்த பேச்சும் இல்லை எனவும் ஹர்சன ராஜகருண குறிப்பிட்டுள்ளார்.