அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! தொடருந்தில் மோதி இருவர் பலி: மற்றொருவர் ஆபத்தான நிலையில...!
காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு தொடருந்தில் கெப் வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஷ
குறித்த விபத்து நடந்த நேரத்தில் கெப் வாகத்தில் சாரதி உட்பட மூன்று பேர் பயணம் செய்துள்ளதுடன், அவர்களை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு
காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு தொடருந்தில் கெப் வாகனமொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்து களுத்துறை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (22) காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்திற்கான காரணம்
இந்த தொடருந்து கடவையில் வண்ண சமிக்ஞை அமைப்பு சரியாக இயங்கவில்லை என்றும், தொடருந்து கடவையில் சரியான பாதுகாப்பு வாயில் நிறுவப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது விபத்திற்குள்ளான கேப் வாகனம் அருகிலுள்ள கட்டுமானப் பணியில் ஈடுபட்ட ஒருவரின் கேப் வாகனம் என்றும், கேப் வாகனம் தொடருந்தில் மோதி கிட்டத்தட்ட ஐம்பது மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் கேப் வாகனத்தில் சாரதி உட்பட மூன்று பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக, கரையோர தொடருந்து மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.