ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் - நிமல் லங்சா
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பவத்தின் சந்தேக நபர்கள் மிக விரைவில் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடக்க இடமளித்து விட்டு, கண்களை மூடிக்கொண்டிருந்த கடந்த நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் தற்பொழுது முதலை கண்ணீர் வடிப்பது கேலிக்குரியது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதால், இந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த எவருக்கும் தற்போது முடியாது.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்ய அரசாங்கம் கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கம் சம்பவம் தொடர்பான பல சாட்சியங்களை அழித்துள்ளது.
சஹ்ரானின் மடிக் கணனியை கூட கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் கடும் சிரமத்திற்கு மத்தியில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் நிமல் லங்சா குறிப்பிட்டுள்ளார்.