கோவிட் தொற்றால் மனைவி இறந்த மூன்று நாட்களில் இறந்து போன கணவர்
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மனைவி இறந்து மூன்று நாட்களின் பின்னர் நேற்றிரவு கணவனும் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர் கதிர்வேல் ஜே. கணேஷ் தெரிவித்துள்ளார்.
கோவிட்-10 வைரஸ் தொற்றியமைக்கான நோய் அறிகுறிகளுடன் கடந்த 13 ஆம் திகதி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பொகவந்தலாவ சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 68 வயதான எஸ். பார்வதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல் கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவருக்கு கோவிட் தொற்றி இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய தினம் இரவே 76 வயதான எஸ். வடிவேல் என்ற குறித்த பெண்ணின் கணவரும் உயிரிழந்துள்ளார்.
இவருக்கும் பீ.சீ.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் டிக்கோயா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.