பணத்தை அச்சிடுவதால் பொருளாதாரத்தை மீட்க முடியுமா?
அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்துள்ள சேதத்தை பணத்தை அச்சிடுவதன் மூலமோ, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை பதவிகளில் இருந்து நீக்குவதன் மூலமோ சரி செய்ய முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
காலியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் பூச்சாண்டியை காட்டி மக்களை ஏமாற்ற முயற்சித்து வருகிறது. உலகின் 184 நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தில் அங்கம் வகிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல், வாங்கல் செய்த எந்த நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்ததில்லை. ஏதாவது ஒரு நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருக்குமாயின் அதற்கு காரணம் சர்வதேச நாணய நிதியமல்ல.
சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாது, வட்டி முதலாளிகளின் பின்னால் சென்றமையே அதற்கு காரணம். கடந்த 73 ஆண்டுகளில் இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் 16 முறை சென்றுள்ளது எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.