நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள கூட்டமைப்பு (VIDEO)
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காகத் தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றிணைந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு இறுதித் தருணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன மறுத்துள்ளது.
குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சமஷ்டியே அமைய வேண்டும் என வலியுறுத்தி வந்த மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இந்த ஆவணத்தில் கையெழுத்திடாமை குறித்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் கரிசனை கொண்டுள்ள தரப்பினர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எனினும் குறித்த ஆவணம் தொடர்பில் வெளியில் இருந்து தமது ஆதரவினை வழங்க தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு),
சி.வி.விக்னேஸ்வரன் (தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ்
பிரேமச்சந்திரன் (தலைவர் - ஈ.பி.ஆர்.எல்.எப்.), என்.ஸ்ரீகாந்தா (தலைவர் -
தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் - ரெலோ),
த.சித்தார்த்தன் (தலைவர் - புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர். மாவை
சேனாதிராஜா (தலைவர் - இலங்கைத் தமிழரசுக் கட்சி) எந்த நேரத்திலும் அந்த
ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும் ஆவண தயாரிப்புக்கான பேச்சுக்களில் பங்கெடுத்த தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கென தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பங்காளி கட்சியான டெலோவின் முயற்சியினால் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் கோரிக்கைளையும் முன்வைத்து ஆவணமொன்றை அனுப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இது தொடர்பான பேச்சுக்கள் பல்வேறு கட்டடங்களாக நடைபெற்றுவந்த நிலையில், இறுதியாக தயாரிக்கப்பட்ட ஆவணம் கட்சித் தலைவர்களின் ஒப்புதல்களுக்காக அனுப்பட்ட போதிலும் அதில் கையெழுத்திடுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிஸ்சும்,மலையக கட்சிகளும் மறுப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் குறித்த இரண்டு தரப்பினரது கையொப்பங்கள் இன்றி, தமிழ் தேசிய கட்சிகள் மாத்திரம் கையெழுத்திட்ட ஆவணத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எமக்கு வழங்கிய விசேட நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
சம்பந்தன் தலைமையிலான தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரைச்
சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர்
எனத் தெரிகின்றது.