மைத்திரியை காப்பாற்றியதால் மக்களின் கோபத்திற்குள் சிக்கிவிட்டோம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை (Maithripala Srisena) காப்பாற்றி வைத்திருப்பதே அரசாங்கம் செய்யும் பெரிய தவறு எனவும் அவர் சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) விரைவில் எடுப்பார் எனவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
கேள்வி:- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றாரே?.
பதில்:- அவரை காப்பாற்றி வைத்திருப்பதுதான் பெரிய தவறு. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். தேவையானவற்றை செய்தால் முடிந்து விடும். நீண்டகாலம் செல்லும் முன்னர் ஜனாதிபதி அதனை செய்வார்.
கேள்வி:- இதனால், அரசாங்கத்தின் இருப்புக்கு அழுத்தங்கள் ஏதுவும் ஏற்படுமா?.
பதில்:- இல்லை. அரசாங்கத்தின் இருப்புக்கு எப்படி அழுத்தங்கள் ஏற்படும்?. அப்பத்தை சாப்பிட்டு விட்டு, தப்பிச் சென்ற பின்னர் நாங்கள் புதிய கட்சியை ஆரம்பித்தோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று மகிந்த ராஜபக்சவை பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து, அவரது சகோதரரை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம். மீதமுள்ளவற்றை செய்வதற்கு அவர்கள் தேவையா?. அவர்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் பாதிப்பு. விலகிச் சென்றால் மிக இலகுவாக இருக்கும் என திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.