நீதிமன்ற உத்தரவிற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றப்பட்டமைக்கும் தொடர்பு இல்லை: சுமந்திரன்
நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி அலுவலகத்தில் இன்று(23) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜே.ஆர்.ஜெயவர்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 1983 ஜூலை கலவரம் ஏற்பட்டு 39 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் உறவினர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் நேற்று(22) காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது.

போராட்டகாரர்கள் நேற்றைய தினத்தில் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
எந்த ஒரு காரணத்திற்காகவும் பண்டாரநாயக்க சிலையை சுற்றி 50 மீற்றர் தூரத்திற்குள் செல்வதற்கு அனுமதியில்லை என்பதே நீதிமன்றத்தின் உத்தரவு.
நீதிமன்ற உத்தரவுக்கும் ஜனாதிபதி செயலக ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றியதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பண்டாரநாயக்க சிலைக்கும் ஜனாதிபதி செயலகத்திற்கும் இடையே அதிகதூரம் உள்ளது.
ஜனாதிபதி செயலகத்தை மீள கையளிப்பதாக போராட்டகாரர்கள் சொன்ன பிறகு இந்த தாக்குதல் அரச படையினரால் இருட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சமூகமும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளது.
முடிவு ஆரம்பம்
இவ்வாறான தாக்குதல் சம்பவம் இனிமேல் நடந்தால் உங்களுக்கு உதவமாட்டோமென ஐனாதிபதிக்கு முக்கிய நாட்டு பிரதிநிதி முகத்துக்கு நேரே சொன்னார். கடந்த மே 9 தாக்குதல் குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றைய தாக்குதல் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்டது. மே 9 தாக்குதலை கண்டித்த ரணில் விக்கிரமசிங்க ஏன் இதனை கண்டிக்கவில்லை.
ஒருசில மணிநேரத்திற்குள் நிறைவேற்றதிகாரம் ரணிலை மாற்றிவிட்டது. நேற்றைய தாக்குதல் நாட்டை பின்னடைய செய்துவிட்டது. இந்த அரசின் முடிவு ஆரம்பமாகிவிட்டது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டம் (Photos) |