ட்ரம்ப் வருகையோடு மாறிய உலக அரசியல் : ஐரோப்பாவுடனான உறவில் விழுந்த ஆழமான விரிசல்!
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றிருப்பது, ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவில் ஒரு "ஆழமான பிளவை" ஏற்படுத்தியுள்ளதாக ஜெர்மனி ஜனாதிபதி ஃபிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) எச்சரித்துள்ளார்.
ஜெர்மனி ஜனாதிபதி ஸ்டெய்ன்மையர், பெர்லினில் நடைபெற்ற ஒரு முக்கிய மாநாட்டில் பேசுகையில், அட்லாண்டிக் கடலுக்கு அப்பால் உள்ள நாடுகளுடனான பாரம்பரிய உறவு இப்போது ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
கடந்த 80 ஆண்டுகளாக நிலவி வந்த பாதுகாப்பு மற்றும் இராஜதந்திரக் கட்டமைப்பு இப்போது சிதைந்துள்ளதாகவும், ஐரோப்பா இனி தனது பாதுகாப்பிற்கு அமெரிக்காவை மட்டும் நம்பியிருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார வலிமை..
ட்ரம்பின் "அமெரிக்கா ஃபர்ஸ்ட்" (America First) கொள்கை மற்றும் நேட்டோ (NATO) அமைப்பின் மீதான அவரது விமர்சனங்கள், ஐரோப்பிய நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்களின் சொந்தப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலிமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக, உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் ஆதரவு குறைவது ஐரோப்பாவிற்குப் பெரும் சவாலாக அமையும்.
அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள இந்த விரிசல், வெறும் தற்காலிகமான மாற்றம் அல்ல, இது ஒரு நீண்டகால வரலாற்றுப் பிளவு என்பதைத் தனது உரையில் ஸ்டெய்ன்மையர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.