மர்மமான முறையில் உயிரிழந்த இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்பு
இருவேறு இடங்களில் மர்மமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
பிரவுன்ஸ் ஹோம்ஸ், தொடருந்து நிலைய வீதி பகுதியில் உள்ள வீடொன்றின் மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஹட்டன் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததைத் தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும், மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய வீதியின் பிரவுன்ஸ் ஹவுஸில் வசிக்கும் 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தானை - நாகொட பகுதி ஆண் ஒருவர் உயிரிழப்பு
கந்தானை - நாகொட பகுதியில் இயங்கி வந்த தசைப் பிடிப்பு நிலையம் ஒன்றில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 42 வயதுடைய திருமணமானவர் எனத் தெரியவந்துள்ளது.
கந்தானை - நாகொட பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் தசைப்பிடிப்பு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.பின்னர் குறித்த நபர் அங்கு உயிரிழந்துள்ளார்.

மரணத்தில் சந்தேகம்
மாரடைப்பு காரணமாக அவர் இறந்துள்ளார் என்று தசைப்பிடிப்பு நிலையத்தினர் தெரிவித்துள்ள போதிலும் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ள கந்தானை பொலிஸார், சடலத்தை
உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.