ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் - சட்டமா அதிபர்
ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னணியில் மிகப் பெரிய சதித்திட்டம் செயற்படுத்தப்பட்டதாகச் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்தும் நேரம், திகதி உள்ளிட்ட தகவல்கள் அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்திருந்ததன் மூலம் மிகப் பெரிய சதித்திட்டம் இதன் பின்னணியில் இருக்கின்றது என்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடையவர்கள் அனைவரும் சாட்சியங்கள் ஊடாக கண்டறியப்பட வேண்டும்.
தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டுள்ள நவ்பர் மௌலவி தாக்குதலுக்குத் தலைவர் என்ற வகையில் சம்பந்தப்பட்டிருந்தார் என்பதற்கான சாட்சியங்கள் இருந்த போதிலும் தாக்குதலுக்கான சூத்திரதாரி என அவரை உறுதியாகக் கூற முடியாது.
தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் வேறு மட்டத்தில் இருக்கின்றனர். சஹ்ரான் ஹசீம் தற்கொலை தாக்குதல் நடத்தத் தீர்மானித்தாலும் அவரும் இந்த சதித்திட்டத்தில் ஒருவர் மாத்திரமே.
இந்த தாக்குதலுடன் வெளிநாட்டு நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கான சாட்சியங்களை விசாரணை அதிகாரிகள் முன்வைக்கவில்லை. சட்டத்திற்கு முன்னால் கொண்டு வர அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படாத நபர்களாகக் கருதுகிறோம்.
எந்த சந்தர்ப்பத்திலும் இந்த வெளிநாட்டு நபர்கள் யார் என்ற தகவல் வெளியாகாமல் இருக்க வாய்ப்புள்ளது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.