சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள்: ஜீவன் தொண்டமான்
எதிரணிகளின் அரசியல் விமர்சனங்கள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியிலும், சர்வதேச நாணய நிதியத்துடனான கொடுக்கல் வாங்கலை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றிகள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வசதி வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்"வங்குரோத்து நிலையை அடைந்த எமது நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை விட வேறுவழி இருக்கவில்லை. ஆகையால் பொருளாதார மறுசீரமைப்புகள் கூட செய்யப்பட்டதுடன் இதற்கு முன்னரும் 16 தடவைகள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது.
எனினும், வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இம்முறை கடனுக்கான அனுமதியை பெறுவது பெரும் சவாலாக அமைந்துள்ளதெனவும் இதற்கிடையில் சர்வதேச நிதி நிறுவனங்களும் தரவுபட்டியலில் இலங்கையை பின்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
நாடுகளின் ஒத்துழைப்பு
இந்நிலையில் தான் இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளைக் கையாண்டு இந்தியா, சீனா, ஜப்பான், பாரிஸ் கிளப் உள்ளிட்ட நாடுகளின் ஒத்துழைப்போடு சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுக்கான அங்கீகாரத்தை ஜனாதிபதி பெற்றுள்ளார்.
இனி இலங்கையால் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு முன்னோக்கி செல்ல முடியும். நிதி
நிறுவனங்களும் இலங்கை மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும்.
அந்தவகையில் ஜனாதிபதிக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானிகளுக்கும்,
ஒத்துழைப்பு வழங்கிய இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் நன்றிகள்” என்றார்.