பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்க்கும் சுமந்திரன்! அரசாங்கத்திற்கு விடுத்துள்ள எச்சரிக்கை
பயங்கரவாதம் என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவ தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான யோசனை மிகவும் வருந்தத்தக்கது. அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கைது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மூன்று பேர் 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்தது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை கட்டளை ஒன்றை பெற்று மூன்று மாதங்கள் தடுத்து வைத்திருப்பதற்கு தாங்கள் கோரியிருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு
பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பது அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம். கடந்த ஆட்சிக்காலத்திலே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி வேறொரு சட்டத்தை கொண்டு வருவதற்கு அரசாங்கம் முயற்சி எடுத்திருந்தது.
இந்த பயங்கரவாத தடைச் சட்டம் மிக மோசமானது. அதை முற்றாக நீக்கப்பட வேண்டும் என நாடு பூராகவும் ஒரு போராட்டம் வகையில் நடத்தி வருகின்றோம்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்ற வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையில் தான் திடீரென மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை உபயோகிக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் மோசமான செயல்
பல்கலைகழக மாணவர் ஒன்றிய செயலாளர் வசந்த முதலிகே மற்றும் இருவர் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டனர். 16 பேருக்கு பிணை கொடுக்கப்பட்ட போதும் இவர்களுக்கு மட்டும் பயங்கரவாத தடை சட்டம் பிரிவு பிரயோகிக்கப்படுகின்றது.
காலாவதியாகி இருக்க வேண்டிய பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கப்பட வேண்டுமென அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உபயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமான அடிப்படையாக நாங்கள் கருதுகிறோம்.
பயங்கரவாத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. மக்கள் ஜனநாயக வழியில் போராடுவது அவர்களுக்கான உரிமை. அதற்காக அவர்களுக்கு தண்டனை கூட வழங்க முடியாது. ஆனால் அதனை பயங்கரவாதம் என சொல்லி மாணவ தலைவர்களை மூன்று மாதங்களுக்கு தடுப்பிலேயே வைத்திருப்பதற்கான இந்த யோசனை மிகவும் வருந்தத்தக்கது.
அரசாங்கம் சர்வதேச
சமூகத்திற்கு இது குறித்து பதில் சொல்ல வேண்டி இருக்கும். மாணவர்கள் உடனடியாக விடுதலை
செய்யப்பட வேண்டும் என்பதோடு இந்தச் சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும்
என்கிற கோரிக்கையை நாங்கள் முன்வைப்போம்.”என கூறியுள்ளார்.