சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயார்: அங்கஜன் இராமநாதன்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கியை பெற்றுத்தர தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் அவர் கூறுகையில்,
"சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அண்மைய நாட்களாக தொடரும் சிக்கல் நிலை தொடர்பில் தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன்.
வைத்தியசாலையின் விபத்து மற்றும் சத்திர சிகிச்சைகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் மின்சார மாற்றீடுகள் இல்லாததாலும், அதற்கான மின்பிறப்பாக்கிகள் வழங்கப்படாத நிலையாலும் மருத்துவ பயன்பாடுகள் அற்ற நிலையில் காணப்படுவதாக கடந்த நாட்களில் அறிய முடிந்தது.
சத்திர சிகிச்சை பிரிவுகள்
இத்தகைய சூழலில் குறித்த பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்து வைத்தியர்களினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தையும் உணர்ந்து, இவ்விடயம் தொடர்பில் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன்.
அதன்படி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அரசாங்கத்தால் போதிய மின்பிறப்பாக்கி வசதிகள் வழங்கப்படும் வரை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கான மின்பிறப்பாக்கிகளை தற்காலிக ஏற்பாட்டில் பெற்றுக் கொடுக்க சிலர் முன்வந்துள்ளனர்.
இதனூடாக வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ளிட்டவற்றை இயங்குநிலைக்கு கொண்டு வந்து மக்களுக்கான வைத்திய சேவையை வினைத்திறனுடன் வழங்க முடியும் என கருதுகிறேன்.
எனவே, இது தொடர்பில் வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்டோரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |