அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
சில பாடங்களை கற்பிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரம் போதுமானதாக இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இது குறித்து பல சந்தர்ப்பங்களில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக அவர் கூறியுள்ளார்.
ஆசிரியர் பயிற்சி
இந்த வாரம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஆசிரியர் பயிற்சி கல்வித் திட்டங்களின் போது இது குறித்து இறுதி முடிவு எட்டப்படலாம் என பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பாடசாலை நேர நீட்டிப்பு தொடர்பாக இதுவரை கல்வி அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் அனுப்பப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
இரண்டாம் தவணை
மேலும் இரண்டாம் தவணையின் பாடத்திட்டத்தை உள்ளடக்குவதற்காக 6-11 ஆம் வகுப்புகளுக்கான பாடசாலை நேரத்தை பிற்பகல் 3:30 மணி வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்படும் என வடமேற்கு மாகாண வலயக் கல்வி இயக்குநர்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணை பாடத்திட்டத்தை உள்ளடக்கி மாணவர்களை பரீட்சைகளுக்கு தயார்படுத்தும் நோக்கில் பாடசாலையின் தினசரி கால அட்டவணையில் ஒவ்வொரு பாடத்திற்கு தலா 55 நிமிடங்கள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.