இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும்
கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து 16 நாட்கள் இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி தாக்குதலை நடத்தினார்கள். இஸ்ரேல் திட்டமிட்டு ஈரானின் படைத்துறை சார்ந்தும், அணு உற்பத்தி நிலையங்கள் சார்ந்தும் இருக்கக்கூடிய முக்கிய இலக்குகளை குறிவைத்து தாக்கி அழித்தது.
குறிப்பாக அதனுடைய இராணுவ கட்டமைப்பு சார்ந்த தலைமைகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை செய்தது. இதற்கு பதில் நடவடிக்கையாக ஈரான் தனது ரோன்களையும், ஏவுகணைகளையும் பயன்படுத்தி இஸ்ரேலை முதல் தடவையாக கதிகலங்கச் செய்தது.
இஸ்ரேலிய மக்கள் பாதுகாப்பு தேடி ஓட வைத்தது என்பது இதுவே முதல் தடவை. இந்த யுத்தத்தில் ஈரானுக்கு பாதிப்பு மிக அதிகம்தான். ஆயினும் மத்திய கிழக்கில் தாம் ஒரு பிராந்திய சக்தி என்பதை ஈரான் நிரூபித்து இருக்கிறது. யாரும் ஈரான் நிலத்தினுள்ளே இறங்கி சண்டை செய்ய முடியாது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.
இஸ்ரேல்- ஈரான் போர்
இந்த நிலையில் தான் B-2 Spirit எனப்படும் அமெரிக்காவின் ஆபத்தான தாக்குதல் விமானங்கள் அமெரிக்காவில் உள்ள மிசூரி விமானப்படைத் தளத்திலுருந்து புறப்பட்டு ஈராக்கினுள் பறந்து GBU-57 எனும் பதுங்குகுழி தகர்பு குண்டுகளிளால் ஈரானின் Natanz, Fordow, Isfahan ஆகிய அணு ஆய்வு நிலையங்களை தாக்கினர்.
அமெரிக்க விமானப்படை வீசிய பங்க பிளாஸ்டர் குண்டுகளினால் ஈரானின் அணு ஆலைகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அதை ஒட்டி இந்த தாக்குதல் வெற்றி என மேற்குலக ஊடகங்கள் ஊதுகின்றன. ஆனாலும் அமெரிக்காவின் சில ஊடகங்கள் மட்டங்களில் இத்தாக்குதல் வெற்றி அளிக்கவில்லை அது படுதோல்வி என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதில் உண்மை உள்ளதாகவே தோன்றுகிறது.
ஈரானிலும் களநிலமை அப்படி இல்லை என்பதாகவே ஈரானிய தரப்புச் செய்திகளின் ஊடாக தெரிகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்கா ஈரானையும், இஸ்ரேலையும் யுத்த நிறுத்தத்திற்கு வரும்படி கூறியிருக்கிறது. இந்த கோரிக்கையை இரண்டு நாடுகளும் ஏற்று யுத்தம் நிறுத்தத்திற்கு வந்துவிட்டனர். அதனால் தற்போது மத்திய கிழக்கில் சற்று அமைதி நிலவுகிறது. ஆயினும் மத்திய கிழக்கில் யுத்தம் தற்காலிகமாக ஓய்ந்திருக்கிறது என்பதே உண்மையாகும். ஈரானைப் பொறுத்தளவில் அது அணுத்திறன் கொண்ட நாடாக அணு ஆயுதத்தை தயாரிக்கும் வரை அவர்கள் ஓயப்போவதில்லை. அவர்களின் முயற்சியைத் தடுப்பதற்கான சீரழிப்பு யுத்தத்தை(Destabilization war) அமெரிக்காவும், இஸ்ரேலும் நடாத்தாமல் இருக்கப் போவதுமில்லை.
வடகொரியா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத்தை தயாரித்த போது இந்த அளவு எதிர்ப்புகள் இஸ்ரேலிடமிருந்து கிளம்பவில்லை. அமெரிக்காவிடமிருந்து கிளம்பவில்லை. ஆனால் ஈரான் அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவதையும், அணுத் தொழில்நுட்பத்தில் முன்னேறுவதையும், அணுகுண்டை தயாரிப்பதையும் ஏன் அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமாக எதிர்க்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கடந்த தொடரில் குறிப்பிட்டது போல மைக்கின்றரின் இருதய நிலக் கோட்பாடு இந்த இடத்தில் தான் முக்கியம் பெறுகிறது.
19ஆம் நூற்றாண்டில் மைக்கின்டரால் முன்வைக்கப்பட்ட இருதயநில கோட்பாடு அன்றைய சோவியத் யூனியன் வளர்ச்சி, கம்யூனிச எதிர்ப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே அன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் அந்தக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. இப்போது அந்தக் கோட்பாட்டின் இருதய நிலப் பகுதி விரிவடைந்து 21 ஆம் நூற்றாண்டின் அரசியலில் மத்திய கிழக்கே இருதய நிலம் என்ற தகுதிநிலையை அடைந்து விட்டது.
ஏனெனில் உலகிற்கான சக்தி வளங்களை வழங்குகின்ற மத்திய கிழக்கு வடாஆபிரிக்கப் பகுதியும் இன்றைய இருதய நிலமாக பரிணமித்துவிட்டது. ஆகவே இன்றைய உலக ஒழுங்கை தீர்மானிக்கும் மைய நிலப்பகுதியாக, கேந்திர ஸ்தானமாக மத்திய கிழக்கு மாறிவிட்டது. மத்திய கிழக்கில் பலம் வாய்ந்த தலைவர்களோ, பலம் பாய்ந்த நாடுகளோ இருப்பது மேற்குலகத்தின் உலக ஒழுங்கின் மேலாண்மைக்கு சவாலாகவும், தடையாகவும் அமைந்து விடும் என்ற அடிப்படையிலேயே ஈரானின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த இவர்கள் முனைகிறார்கள் என்பதே அதன் உள் பொருளாகும்.
மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்க பிராந்தியம் உள்ளிட்ட பகுதி இன்று அரபு உலகம் என வரையறை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் 17 அராபிய நாடுகளும் ஒரு பாரசீக நாடும் (ஈரான்) உள்ளன. வட ஆப்பிரிக்காவில் 8 இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த 26 மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கி இந்த பிராந்தியத்தில் 53 கோடி மக்களையும் உள்ளடக்கிய பகுதி இஸ்லாமிய உலகென்று அழைக்கிறது. இந்த. அரபு - பாஸ்தீன - இஸ்லாமிய உலகத்தின் நடுவில் 60 லட்சம் யூதர்களைக் கொண்ட யூத தேசம் இருப்பது என்பது இலகுவானது ஒன்று அல்ல.
மத்திய கிழக்கின் சீரழிவு
எனினும் இஸ்ரேல் தன்னை எவ்வாறு தற்காத்துக் கொண்டு இந்த பிராந்தியத்தில் கடந்த 75 ஆண்டுகளாக நிலைத்து உள்ளது என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.அந்தவகையில் மத்திய கிழக்கிற்கு தனியான புவிசார் அரசியல் நலன்களும், குணாம்சங்களும் உண்டு. அத்தோடு இப்பிராந்தியத்தியம் புவிசார் அரசியலிலும் அதே நேரத்தில் உலகம் தளவிய பூகோள அரசியலின் செல்வாக்குக்கு உட்பட்டதாகவும் செல்வாக்கினை நிர்ணயிக்கும் கேந்திர ஸ்தானமாகவும் அமைந்துள்ளது. மூன்று கண்டங்களையும் மூன்று சமுத்திரங்களையும் இணைக்கும் மத்திய தளமாக அமைவதனால் இந்த பிராந்தியம் பூகோள அரசியலில் இன்று முதன்மை பாத்திரத்தை வகிக்கிறது.
மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் பல்வகைப்பட்ட தன்மை வாய்ந்ததாக ஐரோப்பியர்களால் வடிவமைக்கப்பட்டு அரசியல் புவியியலால் கட்டுண்டு கிடக்கிறார்கள். அந்த கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பிலிருந்து அவர்களால் வெளிவரவும் முடியவில்லை. இஸ்லாமிய உலகம் என்று சொல்லிக் கொண்டாலும் அந்தப் பிராந்தியத்தில் பொதுவான பரந்த இஸ்லாமிய தேசியவாதம் என்பது கிடையாது. அது நாட்டு தேசியவாதமாகவே அதாவது ஈரானியன் என்றும், இராக்கி என்றும் பலஸ்தீனியர் என்றும், லிபியன் என்றும், மோரோகன் என்றுமே அவர்கள் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். இதுவே மத்திய கிழக்கின் சீரழிவுக்கு இன்னும் ஒரு காரணமாகும்.
அதே நேரத்தில் ஆபிரிக்க கண்டமும் இப்போது மேற்குலகத்தின் பிடியிலிருந்து சற்று விலகி சீனா பக்கம் சாயத் தொடங்கிவிட்டது. ஆபிரிக்க கண்டத்தில் 40க்கு மேற்பட்ட நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து விட்டது. இந்த நிலையில் ஈரானுடனும் சீனா அதீத நாட்டத்தை காட்டுகிறது. உலகளாவிய ஆதிக்க போட்டியில் சீனாவின் தலையெடுப்பும், அது செங்கடலில் ஒரு பிரதான தளத்தை அமைத்து விட்ட நிலையில் வளைகுடாவில் ஒரு தளத்தை சீனா அமைத்தால் சீனாவினுடைய புதிய பட்டுப்பாதை வியூகம் வெற்றி நடை போடும். அது உலக ஒழுங்கை சீனாவின் பக்கம் சாய்த்து விடும்.
இந்த நிலையில்தான் அமெரிக்கா மத்திய கிழக்கில் அதுவும் ஒரு கேந்திர முக்கியத்துவம் அந்த பிரதேசத்தில் சக்தி வளமிக்க ஒரு பிரதேசத்தில் சீன வருகையை தடுப்பதற்காகவே இதய நிலத்திலும் அதனை அண்டிய நிலப் பகுதியிலும் தனது பதில் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு உலகம் தழுவிய அரசியலை நிலை நாட்டுவதற்கும், உலக ஒழுங்கை தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பதற்கும். இஸ்ரேல் போன்ற ஒரு அடியால் மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்காக ஒரு பதில் யுத்தத்தை (Proxy war) நடத்துவார்கள். இப்போது உக்ரைனும், இஸ்ரேலும், மேற்கு கிழக்கு ஐரோப்பியர்களும் ரஷ்யா உடனும் ஈரானுடனும் நடத்தும் போர் அமெரிக்க நலன்களுக்கானது என்பதுதான் உண்மை.
இந்நிலையில் தான் 21ஆம் நூற்றாண்டில் மத்திய கிழக்கின் முக்கிய தலைவர்களான சதாம் உசேன், கேனல் கடாபி, பின்லேடன் போன்றவர்கள் கொல்லப்பட்டார்கள். ஈரானின் அணுவாராய்ச்சியின் தந்தை என வரணிக்கப்படும் மோசான் பற்றிஷேட்(Mohsen Fakhrizadeh) 2020 நவம்பர் 27இல் ஈரானில் கொல்லப்பட்டார். இதற்கு முன்னர் 60க்கும் மேற்பட்ட இளம் ஈரானிய விஞ்ஞானிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறே இஸ்லாமிய புரட்சிக்காவல் படை தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈராக்கின் ஹஷித் அல்-ஷாபி துணை இராணுவப்படையின் துணைத் தலைவர் அபு அஹ்தி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். 19 மே 2024இல் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமிரப்துல்லாஹியன் உட்பட மேலும் பலர் மர்மமான விமான விபத்து மூலம் மரணமடைந்துள்ளனர். அல்லது கொல்லப்பட்டனர். இப்போது ஈரானின் முக்கியமான இராணுவ தலைவர்களும் அனுவாராய்ச்சி அணு தொழில்நுட்பம் சார்ந்தவர்களும் இலக்குவத்துக்கு வைத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த அடிப்படையில் பார்க்கின்ற போது ஈரானின் வளர்ச்சியை தடுப்பதற்கான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்றை தொடர்ந்து இஸ்ரேலும் அமெரிக்காவும் மேற்கொள்ளும். அதனை அவர்கள் தற்காப்பு யுத்தம் என்பார்கள். இங்கே தற்காப்பு, ஆக்கிரமிப்பு-என்ற இரண்டையும் அவரவர் நலன்களின் அடிப்படையில், பங்கு கோடல்களின் அடிப்படையில், பகிர்ந்து கொள்ளுதலின் அடிப்படையில் அவரவர் நிலைக்க ஏற்ற வகையில் உலக அரசுகள் ஏற்றுக்கொள்ளும், கீழ்ப்படியும், சகித்துக் கொள்ளும். இதுவே சர்வதேச அரசியலின் போக்காக உள்ளது. இந்த நிலையில்தான் ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான யுத்த களத்துக்கள் புகுந்த அமெரிக்கா விமானங்கள் வீசிய சக்தி வாய்ந்த .GBU- 57 என்று அழைக்கப்படும் 'பங்கர் பஸ்டர்' குண்டுகள் ஈரானின் பாலைவன மலைகளுக்கிடையில் கிணறுகளைத் தோண்டி உள்ளன.
ஈரான் நீண்ட காலமாக இத்தகைய தாக்குதலை எதிர்பார்த்தே. இவர்களுடைய தாக்குதல் வீச்சுக்கு அகப்படாமல் நிலத்துக்கு அடியில் மிக ஆழமான மலைகளுக்கு கீழே தனது அனுவாராய்ச்சி நிலையங்களையும் சேமிப்பு கிடங்குகளையும் உருவாக்கி வைத்திருக்கிறது. எனவே இந்த தாக்குதல்கள் அந்த அணு ஆராய்ச்சி நிலையங்களுக்கு செல்வதற்கான சுரங்கப்பாதையின் முகப்புக்களில் இருந்த பெரும்பாலான கட்டிடங்களே அழித்தொழிக்கப்பட்டு இருக்கின்றன. எனவே ஈரானின் அணுத்தொழில்நுட்பமும்அதற்கான வலுவோ அமெரிக்காவின் தாக்குதலில் அழிக்கப்படவில்லை. இத்தாக்குதலின் மூலம் அமெரிக்கா “”கிழடுதட்டிய வல்லரசு“”(aging superpower) என்பதை வெளிப்படுத்தியதாக அமைந்துவிட்டது.
ஈரானிய இராணுவம்
அதுமட்டுமல்ல உலகின் புதிய வளர்ந்து வரும் வல்லரசுக்கு(rising super power) இவர்களே முடிசூட்டப்போகிறார்கள். அன்று மகா அலெக்ஸ்சான்டர் சொன்னதுபோல் ““தூங்கும் சீன என்ற அரக்கனை தட்டி் எழுப்பாதீர்கள்““ என்பதற்கு மாறாக எழுப்புவதாகவே அமையும். 1800களின் ஆரம்பத்தில் நெப்போலியன் எழுச்சியினால் மேற்கு ஐப்பியர்கள் ஆசிய ஆபிரிக்க குடியேற்ற நாடுகளை பிரித்தானியாவிடம் கையளித்ததன் மூலம் பிரித்தானியா சூரியன் அஸ்தமிக்காத தேசமாக ஏறக்குறைய 150 ஆண்டுகள் உலக ஒழுங்கை தீர்மானித்தது. ஆயினும் 2ஆம் உலகப்போரில் தொடர்ந்து போரிட்டதன் விளைவு அது பலவீனமடைந்திருந்த வேளை யுத்தத்தின் இறுதியில் யுத்த களத்துக்கு நுழைந்த அமெரிக்கா ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டுகளை வீசி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது மாத்திரமல்ல உலக ஒழுங்கை தீர்மானிக்கும் சக்தியாக தன்னை நிலைநாட்டிக் கொண்டும் விட்டது.
இங்கே சூரியனை அஸ்தமிக்காத தேசம் அஸ்த்தமித்தது போன்றுதான் மத்திய கிழக்கிலும் ஈரானுடன் தொடர்ந்து யுத்தத்தை நடத்தினால் பிரித்தானியாவுக்கு ஏற்பட்ட நிலையே அமெரிக்காவுக்கு ஏற்படும் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது. எனவே மத்தியகிழக்கை கலக்கி சீனா என்னும் ரகனுக்கு வழிவிட்டு முடிசூட்டுவதாகவே அமையும். ஈரானுடன் ஒரு தரைவழி யுத்தத்திற்கு அமெரிக்கா தயார் இல்லை. மத்திய கிழக்கில் மிகப் பலம் வாய்ந்த சமூக பண்பாட்டை கொண்ட மக்கள் கூட்டத்தினால் கட்டப்பட்டிருக்கும் ஈரானிய இராணுவம் சக்தி வாய்ந்தது.
ஈரான் ஏவுகணை, ரோன் தொழில்நுட்பத்திலும் முன்னேறி இருக்கிறது. இந்த நிலையில் பாலைவனத்தில் ஒரு யுத்தத்தை அமெரிக்கா நடத்த முடியாது. முன்பு இருந்தது போன்று ஈரானுடனான யுத்தத்திற்கு உலக நாடுகள் ஆதரவளிக்காது. ஆகவே ஒரு நீண்ட யுத்தத்திற்கு வழிவகுக்கும். நிலையில்தான் விமானத் தாக்குதலை நடத்தி விட்டு போரி நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது. அதே நேரத்தில் தொடர்ந்து யுத்தத்தை நடத்த ஈரானும் விரும்பவில்லை. காரணம் இதனுடைய இலக்கு அணுகுண்டை தயாரிப்பதுதான். ஆகவே தன்னை அணுவாயுத நாடாக மாற்றும்வரை எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு சகிப்புத்தன்மையுடன் அமெரிக்காவுடனான ஒரு நேரடி யுத்தத்தில் இறங்காமல் தன்னை தற்காத்துக் கொண்டு தன்னை வளர்த்துச் செல்லவே ஈரானியர்கள் விரும்புகிறார்கள்.
இத்தகைய அரசியல் முடிவென்பது ஈரானியர்களுடைய 2500 ஆண்டுகளுக்கு மேலான பேரரசபாரம்பரியமும், யுத்தப் பண்பாட்டையும் கொண்ட மக்கள் என்ற அடிப்படையில் அவர்கள் அறிவுபூர்வமாக இப்போது சிந்திப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அவர்கள் வரையறுக்கப்பட்ட அமெரிக்கா தனம் மீதான தாக்குதலியே நடத்தினார்கள். ஆனால் இஸ்ரேலின் மீது அவர்கள் ஈவிரக்கமற்று தாக்குவார்கள் என்பதும் உண்மைதான்.
அமெரிக்கா ஈரான்டன் ஒரு யுத்தத்தை நடத்தாமல் இருப்பதனை அமெரிக்கா இன்று ஒரு வயது முதிர்ந்த அல்லது கிழடுதட்டிய வல்லரசு (America is an aging superpower).நிலையை அடைந்து விட்டதனையே ஈரானுடனான அதனுடைய அணுகுமுறை வெளிப்படுத்துகிறது என்று சொல்வதே பொருந்தும். வயதுமுதிர்ந்த சிங்கம் கழுதைப்புலியுடன் மோதினால் அது வெகுவாக படுகாயம் அடையும். படுகாயத்தினால் ஏற்படும் தொற்றுக்களினால் அது விரைவில் மரணிக்கும். எனவே அத்தகைய நிலையில் கிழச்சிங்கம் தப்பி ஓடுவதன் மூலம் தொடர்ந்து காட்டு ராஜா பதவியை தக்க வைக்கும். அப்படித்தான் ஈரானிலும் அமெரிக்கா தப்பியோடுகிறது.
உலகப் பொலிஸ்காரன் என்ற தலைமைத்துவத்தை பேண, அது நீண்ட காலத்துக்கு நீடிக்க யுத்தத்தை தவிர்ப்பதே சிறந்த வழி. அமெரிக்க கிழச்சிங்கத்து காயம் ஏற்பட்டால் உலகின் நாட்டாமையாக சீனா என்கின்ற டிராகன் வந்துவிடும். அதாவது பிரித்தானியாவிடமிருந்து அமெரிக்கா தான் கைப்பற்றிய உலகப் பொலிஸ்காரன் என்ற பதவியை சீனா பறித்துக் கொள்ளும். GBU- 57 'பங்கர் பஸ்டர்' குண்டுகள், B2 போர் விமானம்,F35 விமானங்கள், ரஃபேல் விமானங்கள், பல்ஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சொனிக் ஏவுகணைகள், அயன்டோம் என நவீன தளவாடங்கள் பற்றியே இன்று அதிகம் பேசப்பட்டாலும் ஒவ்வொரு நவீன ஆயுத கண்டுபிடிகளுக்கும் பின்னே அதனை முறியடிக்க கூடிய புதிய வகையான நவீன எதிர்ப்பு ஆயுதங்களை எதிர் தரப்பினர் தயாரித்தே வருகின்றனர்.
இதனை கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளேயே இந்த உலகம் கண்டிருக்கிறது. இந்த போர் ஆயுதங்களால் மட்டும் யுத்தத்தில் நாடுகளை வெற்றி கொள்ளப்பட முடியாது. ஒவ்வொரு நாடும் அது அமைந்திருக்கின்ற அமைவிடமும் அதனுடைய மக்கள் தொகையும் மக்களின் பண்பாட்டு பலமும் ஒவ்வொரு நாடுகளுடைய புவியியல் அமைவிடமும், புவிசார அரசியலும் அந்த நாடுகளின் இருப்பினையும் போக்கையும் தீர்மானிக்கும் நியதியாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 29 June, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri
