வாழைச்சேனையில் கடற்றொழிலுக்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம்
மட்டக்களப்பு- வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் மீன் கொம்பு குற்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று(29) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, உயிரிழந்தவர் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்மாஆ பள்ளி வீதியை சேர்ந்த மீரா லெப்பை சஹாப்தீன் (வயது 47) என்பவராவர்.
விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாழைச்சேனை துறைமுகத்தில் இருந்து கடந்த 24.06.2025 அன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக மூன்று பேர் படகில் சென்றுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த நபர்கள் நேற்று (29) மீன் பிடித்து கொண்டு இருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனை தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்த ஒருவர் மீது மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் குத்தி காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டுவரும் நோக்கில் கரைக்கு வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மரணம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸாரும், கடற்றொழில் துறைமுக கடல் ஓர பாதுகாப்பு படையினரும் நடாத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

