விரைவில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கை! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாண தவறினால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி தொழிற்சங்கங்களுக்கு இடையில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (16) கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
கல்வித்துறையில் பிரச்சினைகள்
இந்த கலந்துரையாடலின் பின்னர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு குறித்து அரசாங்கம் தீர்வுகாண தவறினால் எதிர்வரும் 20 ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இச்சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மாகாண கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
கோரிக்கை
அத்துடன், பாடசாலை கட்டடங்களுக்கு அரசியல்வாதிகளின் பெயர்கள் சூட்டப்படுவதை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.