சப்ரகமுவ மாகாணத்தில் 917 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு
சப்ரகமுவ மாகாணத்தில் பட்டதாரிகள் மற்றும் டிப்லோமாதாரிகள் 917 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கொழும்பு மற்றும் பேராதெனிய பல்கலைகழகத்தில் கல்வி இளங்கலைமாணி பட்டத்தை முடித்து கொண்ட 21 பேருக்கும் அத்துடன், 2018-04-27ஆம் திகதி மற்றும் 2019-03-31ஆம் திகதி இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய பரீட்சைக்கு தோற்றி கூடிய புள்ளிகளை பெற்ற 387 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
அத்துடன் 2020-08-28ஆம் திகதி கோரப்பட்ட விண்ணப்பத்திற்கமைய அதில் சித்தி பெற்ற தமிழ் மொழி மூல பட்டதாரிகள் மற்றும் டிப்லோமாதாரிகள் 251 பேருக்கும் மற்றும் சிங்கள மொழி மூல பட்டதாரிகள் 285 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.
இதில் வரலாறு, அரசியல், புவியியல், பௌத்த சமயம், பௌத்த நாகரிகம், விஞ்ஞானம்,ஆங்கிலம், தொழிநுட்பம், கணிதம், பொருளாதாரம், வணிகம் மற்றும் கணக்கியல், தகவல் தொழிநுட்பம், சிங்களம் மொழி மற்றும் இலக்கியம் கலை, சுகாதாரம் போன்ற பாடங்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் காலை வேளையில் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த 250 பேருக்கும், பகல் வேளையில் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த 250 பேருக்கும், சப்ரகமுவ மாகாண கேட்போர் கூடத்தில் வைத்து இன்றைய தினம் நேரடியாக நியமன கடிதம் கையளிக்கப்பட்டது.
ஏனையோருக்கு தபால் மூலம் நியமன கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண பிரதான செயலாளர் ரஞ்ஜனி ஜயகொடி, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன உட்பட கல்வி அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.