தாயக மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வாக புதிய திட்டம்: பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவிப்பு
வடகிழக்கில் உள்ள மூன்று இனங்களினதும் தனித்துவத்தினையும் அவர்களின் தேசியத்தினையும்
உறுதிப்படுத்தும் வகையிலான அரசியல் தீர்வுத்திட்ட வரைபினை முன்கொண்டு செல்லவுள்ளதாக
யாழ்.பல்கலைக்கழக அரசியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
நேற்றும் (கிளிநொச்சி) இன்றும்(மட்டக்களப்பு) இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடல் நிகழ்வின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த வரைவை தயார் செய்து வரைபினுடைய உள்ளடக்கங்கள் அனைத்தையும் சிவில் அமைப்புகளோடு உரையாடி, அதில் என்னென்ன விடயங்களை மேலும் இணைத்துக் கொள்ளுதல், அதன் முக்கியத்துவம் என்ன என்பது பற்றியும் சிவில் அமைப்புகளுடைய காத்திரமான பங்கு இந்த வரைபுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நோக்கோடும் வடக்கு கிழக்கை சேர்ந்த சிவில் அமைப்புகளை கடந்த இரண்டு நாட்களில் சந்தித்திருக்கிறோம், கலந்துரையாடி இருக்கிறோம்.
அரசியல் சார்ந்த பிரச்சினை
அது தொடர்பான சில விமர்சனங்கள் அல்லது வாதங்கள் அல்லது அதனை மேலும் வலுப்படுத்துவதற்கான உள்ளடக்கங்களை அந்த வரைவுக்குள் முதன்மைப்படுத்துகின்ற விதத்தில் சிவில் அமைப்புகள் முக்கியமான அம்சங்களை முன் வைத்திருக்கின்றார்கள்.
குறிப்பாக, வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிவில் அமைப்புகள் அதிகமான விடயங்களை தெரிவித்தது மட்டுமல்லாமல், எதிர்காலத்திலும் இது தொடர்பான உள்ளடக்கங்களை மேலும் வலிமைப்படுத்துவதற்கும், ஆரோக்கியமான உரையாடலை செய்வதற்குமான விடயங்களை அவர்கள் எங்கள் முன்னிலையில் வழிமொழிந்திருக்கிறார்கள்.
நிச்சயமாக இந்த வரைவு ஈழத்தமிழர்களுடைய அரசியல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அரசியல் கட்சிகள் அதேபோன்று சிவில் அமைப்புகள், புலம்பெயர் தளத்தில் இருக்கின்ற அமைப்புகள் அனைவருக்கும் இடையில் ஒரு பொதுவான, அங்கீகரிக்கப்பட்ட ஒரே தீர்வாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துவதற்கு நோக்கம் கொண்டு தான் மக்கள் சிந்தனை மையம் அதை ஏற்படுத்தி இருக்கிறது.
2021 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் சிந்தனை மையம் அரசியல் கட்சிகளோடு உரையாடி நாடாளுமன்ற உறுப்பினர்களோடு உரையாடி இந்த வகையான ஒரு வரைபை வரைந்து அந்த வரைபை மக்களிடம் அல்லது சிவில் அமைப்புகளிடம் அதற்குரிய தெளிவையும் அதற்குரிய உண்மை தன்மையும் வலியுறுத்திவிட்டு மீண்டும் அரசியல் கட்சிகளோடு இந்த விடயம் தொடர்பாக உரையாடி, அதேபோல் புலம்பெயர் தளத்தில் இருக்கின்றவர்களுடன் இந்த விடயம் தொடர்பாக உரையாடி ஒரு இறுதி முடிவை எடுத்த பிற்பாடு ஊடகங்கள் சார்ந்து இறுதி முடிவினுடைய வடிவத்தை நாங்கள் ஒப்புவிப்பது என்று தீர்மானித்திருக்கிறோம்.
அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வு
அதற்கான பூர்வாங்க வேலைகளை இந்த சிவில் அமைப்பின் உடைய உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள், சார்ந்திருக்க கூடியவர்கள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
வரக்கூடிய இந்த வரைபினுடைய உள்ளடக்கம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய அல்லது இலங்கையினுடைய அரசியல் பரப்பில் பொருத்தப்பாடு உடையது என்று கருதப்படக் கூடிய விடயங்களை உள்ளடக்கி தான் இந்த சிவில் தரப்புகளுடன் சேர்ந்து மக்கள் சிந்தனை மையம் இந்த வரைபை முதன்மைப்படுத்தி இருக்கிறது.
ஒரு கூட்டு ஆட்சி தன்மை குறித்த வரைபாகவே இதனுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது. அதேநேரம் இது கூட்டு சமஷ்டியையும் சமஷ்டிக்குரிய மாதிரிகளையும் இந்த வரைபில் பேசப்படுகிறது.
13 சார்ந்து பேசப்படுகிறது. இவை எல்லாவற்றையும் முதன்மைப்படுத்துகின்ற வகையில் ஈழத் தமிழர்கள் ஒரே வரைபாக இந்த விடயத்தை முதன்மைப்படுத்துகின்ற நோக்கோடு இந்த வரைபினுடைய உள்ளடக்கம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இதன் ஊடாக ஈழத் தமிழர்களுக்கான அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை இந்த வரைவு தனக்குள்ளே உள்ளடக்க வேண்டும் என்பதும், அந்த உள்ளடக்கம் சார்ந்த அதனுடைய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை காண உரையாடல்களை எல்லா தளத்திலும் முதன்மைப் படுத்த வேண்டும் என்றும் சிவில் அமைப்புகளோடு சேர்ந்து முயற்சித்திருக்கிறோம்.
முஸ்லிம்கள் மட்டுமல்ல வடக்கு கிழக்கில் இருக்கின்ற சிங்கள மக்களும் தங்களுடைய தேசிய தனித்துவங்களை பேணக் கூடிய வகையில் இந்த வரைபினுடைய உள்ளடக்கம் காணப்படுகிறது.
வடக்கு கிழக்கில் இருக்கின்ற ஈழத் தமிழர்கள் எவ்வாறு முதன்மைப்படுத்தப்படுகின்றார்களோ? அவ்வாறான முதன்மைப்படுத்தல் முஸ்லிம்களுக்கும், சிங்கள மக்களுக்கும், மலையக மக்களுக்கும் உரித்தாக இந்த வரைவு தனது உள்ளடக்கத்தை கொண்டிருக்கும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









