ஐ.நாவின் வாய்ப்பாட்டில் மாற்றம் தேவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்றுவருகின்றது. அதில் வழமைபோன்று இலங்கை மனித உரிமைகள் விடயம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது.
இதில் கலந்துகொண்டு, இலங்கை குறித்த அறிக்கையை வாசித்த மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்லெட், பாதிக்கப்பட்ட மக்கள் உரிமைகளை ஏற்றுக்கொள்வது, இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்துவதில் உள்ள தாமதம், தமது அதிருப்திக்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அதிருப்தி வாய்ப்பாட்டைப்போலத்தான். அதாவது ஐ.நாவின் வாய்ப்பாடு. ஓவ்வொரு வருடமும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, பாதுகாப்பு அவை கூடுவதும், அதில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுவதும், அதனை எதிர்த்து, ஆதரித்து உலக நாடுகள் திரள்வதும், அத்தீர்மானங்களை இலங்கை அரசு உடனடியாகவே நிராகரிப்பதுமான அரசியல் கடந்த 13 ஆண்டுகளாகத் தொடர்கின்றது.
இதுவொரு சலிப்புத்தட்டிய நடைமுறையாயினும் உலகம் அதனைத்தான் நீதி வேண்டிய தரப்பினராகிய தமிழர்களுக்கு முன்வைக்கிறது. ஆனால் தமிழர்கள் அது குறித்து சலிப்படைந்துவிட்டனர்.
தாம் சர்வதேச தளத்திலும் ஏமாற்றப்படுவதாய் உணர்கின்றனர். உண்மையில் நீதி வேண்டிப் போராடும் தரப்பினராகிய தமிழர்கள் சார்பில் முன்வைப்பதற்கும், தீர்மானம் இயற்றுவதற்கும் பல்வேறு விடயங்கள் உள்ளன.
அந்தப் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்தும் செல்கின்றன. அந்தவகையில் சர்வதேச தளத்தில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தர மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் முதன்மையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது காணாமலாக்கப்பட்டோர் விடயம்தான்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிக நீண்டகாலமாகவே தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர். 1963 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை இந்தச் சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
சர்வதேச தொண்டு நிறுவனங்கள், சர்வதேச மனிதவுரிமைகள் நிறுவனங்கள், உள்ளூர் மனிதவுரிமைகள் நிறுவனங்கள், அரச ஆணைக்குழுக்கள் போன்றவற்றில் இதற்கான பதிவுகள் உண்டு.
எனவே இவற்றைக் காலக்கிரமப்படி ஒழுங்குபடுத்தினால் உண்மையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை ஆயிரம் பேர் வலிந்து காணாமலாக்கப்பட்டனர் என்ற புள்ளிவிபரத்தைப் பெறமுடியும்.
ஆனால் துரதிஸ்டம் என்னவெனில் இதுவரையில் மேற்கண்ட நிறுவனங்கள் எவையுமே இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குறித்த தெளிவான புள்ளிவிபரத்தை வெளியிடவில்லை.
ஆனால் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் காணாமலாக்கப்பட்டோர் விடயம் இலங்கை குறித்த உப பிரச்சினையாக முன்வைக்கப்படுகின்றது.
அதனை வலுப்படுத்த காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சாட்சிக் கதைகள் சிலவும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில்தான் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கை அரசின் நீதிப் பொறிமுறைகளிலும், நீதி வழங்கலுக்காக அமைக்கப்படும் ஆணைக்குழுக்களிலும் தமக்கு நம்பிக்கையில்லை எனவும், சர்வதேசம் தலையீட்டுடன் கூடிய நீதிப்பொறிமுறையே தேவை எனத் தெரிவித்து 3 வருடங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
வெள்ளைவான்களில் கடத்திக் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளின் தாய் - தந்தையர், இறுதிப்போரின் இறுதி நாட்களில் தம் பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த தாய் - தந்தையர், கணவன்மாரைக் கையளித்த மனைவிமார், அவர்தம் பிள்ளைகள் இந்தப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு மேலாகத் தம் வீடுகளை, சுகாதார மிகு வாழ்வை, கொண்டாட்டங்களை, மகிழ்ச்சியான பொழுதுகளை தவிர்த்தே இப்போராட்டங்களில் இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.
ஒருவிதத்தில் இப் போராட்டக்காரர்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக மாறிவிட்டது. தெருவிலே வாழ்வு என்றாகிப் போன இவர்களது வாழ்நிலையை முன்பெல்லாம் ஊடகங்களும், தொண்டு நிறுவனங்களும் பெரிதும் கொண்டாடின. நாட்செல்ல செல்ல கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டன.
மனிதவுரிமைகள் தினம், பெண்கள் தினம், காணாமலாக்கப்பட்டோர் தினம் என எதாவது சர்வதேச தினங்கள் வந்தால் மாத்திரமே அப்பக்கம் திரும்பிப் பார்க்கும் நிலை இன்றுள்ளது.
இந்தப் போராட்ட காலத்தில் மட்டும் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிவந்த 150 இற்கும் மேற்பட்ட தாய் - தந்தையர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர். அதாவது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான 150 இற்கும் மேற்பட்ட சாட்சியங்கள் அழிந்துவிட்டன. போராடிச் சாவென படுகொலை செய்யப்பட்டுவிட்டனர். துயரமென்னவெனில், காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிவந்த ஒருவர் இறப்பதோடு, அவரின் தேடல் பயணமும் முடிவுக்கு வந்துவிடுகிறது.
அனேக இடங்களில் இவ்வாறானதொரு இறப்புச் சம்பவத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்டவரை இனி தேடுவதற்கு யாருமில்லை என்ற நிலையே உருவாகிவருகின்றது. யாழ்ப்பாணத்தில் 1995 –1999 ஆம் ஆண்டுவரை கடத்திக் காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடிய தொடர் தேடலுக்கு என்ன நடந்ததோ, அதுவேதான் இப்போது நடக்கும் காணாமலாக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கான போராட்டங்களுக்கும் நடந்துவிடுமோ என்ற அச்சநிலை இப்போது உருவாகியிருக்கின்றது.
இறந்தவர்கள் போக தற்போது போராடிக் கொண்டிருப்பவர்களும் பல்வேறு நாட்பட்ட நோய்த்தாக்கங்களுக்கு உட்பட்டிருக்கின்றனர். நீரிழிவு, இதயநோய்கள், சிறுநீரகச் செயழிழப்பு, உயர் இரத்த அழுத்தம், சுவாச நோய்கள், உள அழுத்தம் எனப் பல நோய்கள் அம்மக்களைப் பீடித்திருக்கின்றன.
இன்னொரு பக்கம் மோசமான வறுமையும் அவர்களை வாட்டிக்கொண்டிருக்கின்றது. இவையனைத்துக்கும் மேலாக புலனாய்வாளர்களின் விசாரணைகளையும், கண்காணிப்பையும் அந்தப் போராட்டக்காரர்கள் எதிர்கொண்டிருக்கின்றனர்.
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை கரிசனைகாட்டும் வடக்கு, கிழக்கு மக்கள் தம் உயிரையிழந்து நடத்தும் போராட்டமே இத்தகையை பாதிப்புக்களை எதிர்கொண்டிருக்கிறது. இது குறித்து ஆழமான கவனிப்பையோ, கரிசனையையோ ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையும் காட்டவில்லை, காணாமலாக்கப்பட்ட உறவுகளை சந்தித்துப்போகும் துணைத்தூதரக அதிகாரிகள், இராஜதந்திரிகளும் வெளிப்படுத்தவில்லை.
இதுதவிர, தமிழர்களது வாழ்விடங்கள் மிகவேகமாக அபகரிக்கப்படுகின்றன. தொல்லியல் ஆய்வுகளுக்கு, வன வளப் பாதுகாப்பிற்கு, மகாவலி எல் வலய அபிவிருத்திக்கு, விமான நிலைய அமைப்பிற்கு, பௌத்த விகாரைகள் அமைப்பதற்கு எனப் பல வடிவங்களில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைககள் தொடர்கின்றன.
இதில் சில திட்டங்களுக்கு ஐ.நா போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதிப்பங்களிப்புக்கள் கூட வழங்கப்படுகின்றன. இவற்றை ஆராய்ந்து, இலங்கையில் தாம் வழங்கும் நிதி உள்ளிட்ட நன்கொடைகள் எவ்வாறு ஏனைய இனத்திரனரது உரிமைகள் மீறப்படுவதற்குப் பயன்படுத்ததப்படுகின்றன என்கிற ஆய்வுகள் கூட நடத்தப்படுவதில்லை.
மாறாக ஒவ்வொரு வருட ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை அமர்வுகளின் பின்னும், இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும், அபிவிருத்திக்கும் பெருமளவு நிதி வழங்கப்பட்டுவருகின்றது.
இதுவரை காலமும் இலங்கை குறித்து சர்வதேச அரங்கில் பேசப்படாத விடயமாக பயங்கரவாதத் தடைச் சட்டம் காணப்பட்டது. ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னர் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் அல்லது மறுசீரமைப்பு பற்றிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
சர்வதேச அரசியல் நலன்களுக்காக இவ்விடயம் வலியுறுத்தப்பட்டாலும், இச்சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழர்களுக்கு சிறிதளவு நன்மைகள் விளைந்திருக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் காலத்திலாவது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் விடுவிக்கப்படுகின்றன.
இந்த விடயத்தில் வழங்கப்படும் தொடர் சர்வதேச அழுத்தமே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மிக நீண்டகாலமாக சிறைகளில் வாடும் ஏனைய தமிழ் இளைஞர்களின் விடுதலைக்கும் வழிவகுக்கும். இவ்வாறாக போர் முடிந்து 13 ஆண்டுகளை கடந்து விட்ட இலங்கையில், தமிழர்கள் மீது கரிசனை கொள்ளும் சர்வதேச தரப்புக்கள் நுணுக்கமாக மேற்கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன.
அவற்றையெல்லாம் மேம்போக்காக அணுகிவிட்டு, தம் நலன்களுக்கு அமைவான விடயங்களில் மட்டும்
அதீத அக்கறை
காட்டுவது சர்வதேச சமூகத்தினால் அநீதி இழைக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு மேலும் பல மடங்கு அநீதியை இழைப்பதற்கு சமமானதாகும்.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
