கல்வி அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது..! தவராசா கலையரசன் கேள்வி
கல்முனை உவெஸ்லி பாடசாலையில் தொழிநுட்ப பீடம் அமைப்பதற்கு 2020ஆம் ஆண்டு கல்வி அமைச்சினூடாக ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்டடம் அமைக்க நிதி
அவர் மேலும் கூறுகையில், “கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலைக்கு தொழில்நுட்ப கட்டடம் அமைப்பதற்காக 2020.06.15ஆம் திகதி கல்வி அமைச்சினூடாக நான்கு கோடி முப்பத்தைந்து இலட்சத்து முப்பத்து மூவாயிரத்து தொன்றூற்று ஒரு ரூபாய் அறுபத்து ஒரு சதம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான ஆவணங்கள் என்னிடம் இருக்கின்றன.

அதே போன்று 2020.07.27 ஆம் திகதி பத்திரிகையில் கேள்வி மனுவும் கோரப்பட்டிருக்கின்றது. ஆனால் கிழக்கு மாகாண தொழிநுட்பப் பிரிவு மற்றும் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் குறித்த கட்டடம் அகற்றப்பட்டுள்ளது.
ஐந்து வகுப்பறைகளையும், கணணி அறையும் கொண்ட கட்டடமே இவ்வாறு அகற்றப்பட்டிருக்கின்றது. இது தொடர்பிலேயே நான் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். ஆனால் அமைச்சர் அந்த கேள்விக்குரிய சரியான பதிலை தரவில்லை.
ஒதுக்கிய நிதிக்கு என்ன நடந்தது?

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலையிலேயே இவ்வாறு கட்டிடம் அகற்றப்பட்டுள்ள நிலையில் தொழிநுட்ப பீடம் அமைப்பதாக கூறி ஒதுக்கிய நிதிக்கு என்ன நடந்தது?
இவ்வாறுதான் எமது கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் மிகவும் சூட்சுமமான வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
விசாரணை குழு
எனவே இந்த விடயத்திற்கு அமைச்சரால் பதில் வழங்க முடியாவிட்டால் இந்த நிதிக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது தொடர்பில் குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்த வேண்டும். இதுதான் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற பாரிய குறை" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பதில் கல்வி அமைச்சர் தெரிவிக்கையில், கல்வி அமைச்சர் வெளிநாடு சென்றுள்ளமையால் இந்த விடயம் தொடர்பில் தகவல்களை திரட்டுவதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam