முதலில் 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் : ஸ்ரீகாந்தா கோரிக்கை (Video)
13 ஆவது திருத்தத்தை முதலில் நடைமுறைப்படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாமென தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ் கட்சிகள் இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது. இதன் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
நாம் இப்போது என்ன செய்தோம் என்று தெளிவாகக் கூற வேண்டிய பொறுப்பு உள்ளது.புதிய அரசியல் அமைப்பு வருமா வரதா என்று உறுதியாகக் கூற முடியாது. அப்படி வந்தாலும் அதில் சிங்கள,பௌத்த மேலாதிக்கம் மட்டுமே அதில் இருக்கும்.இது மட்டும் உறுதி. ஏனென்றால் இது தான் நடந்தது. எமது கடந்த கால அனுபவம் இது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் ராஜீவ் காந்தி காலத்தில் எழுதப்பட்ட போது தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் அன்று வாக்குறுதி எமக்கு வழங்கப்பட்டது. அதன் உரித்து இந்தியாவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையிலேயே நாம் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம்.
13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் முழுமையான பிரச்சினைக்குத் தீர்வு தரும் என்று ஒரு நாளும் நாம் கூறவுமில்லை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் ,சட்ட ரீதியாக அமுல் படுத்துமாறு கூறிய 13 ஆவது திருத்தத்தை முதலில் அமுல் படுத்தினால், அதில் உள்ள சிறிய விடயங்களை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்கலாம்.
ஒன்றுமே இல்லாமல் இருக்கும் இடத்தில் இருக்கிறதை என்றாலும் நாம் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் எமது தமிழ் மக்களின் இருப்பு தற்போது அழிந்து வருகிறது அழிக்கப்பட்டு வருகிறது.குறிப்பாகச் சிங்கள குடியேற்றம் இடம்பெற்று வருகிறது. ஆகவே இருக்கிறதை முதலில் அமுல்படுத்துங்கள் என்று தான் கூறுகின்றோம் எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.