அரியநேந்திரனுக்கு முழுமையான ஆதரவினை தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும் : விடுக்கப்பட்ட கோரிக்கை
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்டத்தின் விவசாயிகள் எதிர்கொள்ளம் நிலைமைகள் தொடர்பிலும் தற்போது ஜனாபதி வேட்பாளர் ப.அரியநேந்திரன் அவர்களுக்கு முழுமையான ஆதரவினை தமிழ்மக்கள் கொடுக்க வேண்டும் என்றும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ச.சுயன்சன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று(13.08.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விற்பனை விலை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கை அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்த நாட்டில் விவசாயிகள் ஆகிய நாங்கள் எங்கள் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை இந்த அரசாங்கம் எப்போதும் அறிவதில்லை விவசாயிகளால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கான விற்பனை விலை சரியாக கிடைப்பதில்லை இன்று தென்பகுதிகளில் இருந்து வருகின்ற தனியார் வியாபாரிகள் எமது உழைப்பினை சுரண்டி அவர்கள் பாரிய இலாபத்தினை அடைகின்றார்கள்.
ஏனைய மாவட்டங்களில் கிழக்கு மாகாணத்தில் 65 கிலோ காணப்படும் ஒரு மூடை நெல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 75 கிலோ ஒரு மூடை என்ற நிறை அளவில் காணப்படுகின்றது. தற்போது 75 கிலோ ஒரு மூடை நெல்லின் விலையானது 6500 ரூபாவிற்கே தனியாரால் கொள்வனவு செய்யப்படுகின்றது.
இது தொடர்பில் இந்த அரசாங்கமோ, அரச அதிகாரிகளோ கரிசனைகளை காட்டுவதில்லை. இன்று விவசாயிகள் தமது உற்பத்தியினை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த கொண்டுவருவதற்கு பாரிய கடன் தொல்லையிலும் உயிரினை பணயம் வைத்துத்தான் தொழிலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இன்று நெல் சந்தைப்படுத்தல் சபை இதுவரை சிறுபோக நெல்லை கொள்வனவு செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உரிய நிர்ணய விலை
இது இந்த அரசாங்கமானது நெல் மாபியாக்கள் அரிசியாலை முதலாளிமார்க்கு தாம் கொடுக்கும் தேர்தல் பரிசாகவே பாக்கின்றோம். அவர்களுடைய தேர்தலின் பரப்புரை செலவுகளுக்காக பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் தமது ஆதரவினை எமது விவசாயிகளிடம் இருந்து சுரண்டி அதன்மூலம் கிடைக்கும் இலாபத்தில் அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமது பரிசாக எமது வளங்களை பெற்றுக்கொடுக்கின்றார்கள்.
இதற்காக இந்த அரசாங்கம் துணைபோகின்றது. இதுவரை இன்று சிறுபோக அறுவடை தொடங்கி ஒன்றரை மாதங்களாகியும் நெல்லிற்கான உரிய நிர்ணய விலை தீர்மானிக்கப்படவில்லை.எம
இவ்வாறான இந்த அரசாங்கம் நாட்டை கட்டி எழுப்புகின்றோம். மக்களுக்கான உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்கின்றோம் என்று கூறுகின்றவர்கள் நாட்டில் பெரும்பான்மையாக கடற்தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகமாக இருக்கின்றார்கள்.
இந்த தொழிலாளர்களின் வாழ்வினை சிதைத்து அதன் ஊடாக தமது இருப்பினை தக்கவைக்கின்ற இந்த அரசியல் தலைவர்கள் தற்போது ஜனதிபதி தேர்தலுக்கு ஆரவாரப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் எமக்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்காக எந்த ஒருவரும் முன்வருவதில்லை. விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் ,கால்நடைவளர்ப்போர்கள் படுகின்ற வேதனைகளை இந்த அரசாங்கத்தின் மேல் மட்டத்தினர் கண்டுகொள்வதில்லை.
இவர்கள் எங்களுக்கான உரிய தீர்வினை பெற்றுத்தரப்போவதில்லை இவர்கள் தமது சுயலாபத்திற்காக எம்மை மகிழ்ச்சி படுத்த பல பொதிகளுடன் வருவார்கள்.
தமிழ் பொது வேட்பாளர்
இருந்தும் நாங்கள் தமிழர்களாக ஒன்று பட்டு ஜனாதிபதி தேர்தலில் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் இம்முறை ஒரு தேசிய இனமாக தென்னிலங்கைக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எமக்கான நெல்லின் விலையினை கூட நிர்ணயித்து தரமுடியாத அரசாங்கம் ஜனாதிபதி ஏனைய வேட்பாளர்களுக்கு நாங்கள் வாக்களித்து எந்த பயனும் இல்லை.
ஒட்டுமொத்தமாக தமிழ்மக்களாக ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளராக தற்போது தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் புத்திஜீவிகளால் உருவாக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி பொது வேட்பாளர் அரியநேந்திரன் அவர்களுக்கு தமிழினமாக ஒன்று பட்டு வாக்களிக்க வேண்டும்.
தமிழ் இனத்தினை பலதடவைகள் கூறுபோட்டு சின்ன பின்னமாக்கி தமிழ்தேசிய இனமாக இருந்த நாம் தமிழ் அரசியல் குழுக்களாக பிரிந்துள்ளோம். இதனை எமது தலைமைகளும் நன்றாக உணர்ந்து இதற்கு உரிய தீர்வினை காணாது விடின் எதிர்காலத்தில் தமிழ்தேசியம் என்று கூறுகின்ற அரசியல் தரப்பினருக்கும் தமிழர்களாகிய நாங்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.
எமது அடிப்படைத் தேவைகள், அன்றாட விடயங்கள், இனப்பிரச்சினை போன்ற விடையங்களில் அக்கறை செலுத்தி செயற்படக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர் தீர்க்கமான முடிவினை எடுத்து விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள்,கால்நடைவளர்ப்போர்,ஏனைய தொழில் துறையில் இருப்போருக்கான உரிய தீர்வுத்திட்டத்துடன் வரவேண்டும்,எவ்வாறு இருந்தாலும் நாங்கள் ஒன்றுபட்டு தமிழினமாக தமிழர்களின் பொது வேட்பாளர் ப.அரியநேந்திரனுக்கு எனது முழுமையான ஆதரவினையும் எனது மக்களின் ஆதரவினையும் பெற்றுக்கொடுக்கவேண்டும்.
ஒரு சிங்கள நண்பர் சொன்னார் ஆயுதம் எடுத்து பெற்றுக்கொடுக்க முடியாததை பேப்பரும் பேனாவும் கொண்டா வாங்கப்போகின்றீர்கள் என்று அவ்வாறு இருக்கின்றது தென்னிலங்கை நிலவரம் எனவே நாம் ஒன்று பட்டு தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவினை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
