வடக்கு, கிழக்கு மாகாணசபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும்: பா.அரியநேத்திரன் நம்பிக்கை
வடக்கு, கிழக்கில் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாகாணசபை தேர்தல் நடைபெற்றால் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
3000 பனை விதைகள் நடும் வாலிபர்கள் என்னும் தலைப்பில் பனை விதைகள் நடும் வேலைத்திட்டம் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பாலமீன்மடு பகுதியில் கடற்கரையினை அண்டியதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட வாலிப முன்னணியின் தலைவர் தீபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
பனையானது தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். கொழும்பு காலிமுகத்திடலில் பெருமளவான பனைமரங்கள் நடப்பட்டிருந்தது.
2012ஆம் ஆண்டு அந்த பனைமரங்கள் அகற்றப்பட்டு தென்னை மரங்கள் நடப்பட்டது. கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்துள்ளார்கள்.
இந்த பனைமரங்கள் அந்த வரலாற்றினை கூறும் என்ற காரணத்தினால் அந்த பனை மரங்கள் அகற்றப்பட்டன. தமிழர்களின் வாழ்வுடன் பிணைந்தது என்பதற்கு இதனைவிட வேறு உதாரணங்கள் இல்லை. இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மணற்கொள்ளை இடம்பெறுகின்றது.
இதற்குப் பின்புலமாக அரசாங்க தரப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் உள்ளனர். ஆனால் மாவட்ட, பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களுக்கு வருகின்றபோது அவர்கள் வாய்திறப்பில்லை.
தாங்களே செய்துவிட்டு மற்றவர்களுக்கு விரல் நீட்டமுடியாது என்ற காரணத்தினால் அவர்கள் வாய்திறப்பதில்லை. பசில் ராஜபக்ச மாகாணசபை தேர்தலை நடத்தப்போவதாக அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
13வது அரசியலமைப்பு இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக வடக்கு, கிழக்கு இணைப்பாக வந்தாலும் கூட ஜேவிபி வழக்கு தாக்கல் செய்ததன் காரணமாக 2006ஆம் ஆண்டு அது பிரிக்கப்பட்டது.
அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை தேர்தல் இரு தடவையும் வடமாகாண சபை தேர்தல் ஒரு தடவையும் நடைபெற்றுள்ளது. அதன் பின் எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறவில்லை.
தற்போது இந்தியா அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட அழுத்தங்கள் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்துவதாகக் கூறியிருக்கின்றார்கள். எனினும் பசில் ராஜபக்சவின் அறிவிப்பானது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு அனைத்து கட்சிகளின் ஆதரவினைப் பெற்றுக் கொள்ளும் வகையில் அதற்கு முன்னோடியாக இவ்வாறான அறிவிப்பினை வெளியிட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
வரவு செலவு திட்ட வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் முடிவுற்றதன் பின்னர் அவர்களின் மனநிலையில் என்ன மாற்றம் வருகின்றது என்பதை யாரும் சொல்லமுடியாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கில் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகியிருக்கின்றோம். வடக்கு மாகாணசபையினையும் கிழக்கு மாகாணசபையினையும் நாங்கள் கைப்பற்றுவோம்.
ஆனால் தேர்தல் நடக்குமா இல்லையா என்பதை வரவு செலவு திட்ட வாக்கெடுப்புக்குப் பின்னர் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கொண்டே தீர்மானிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், வாலிப முன்னணியின் வடக்கு, கிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.