கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பு: 70க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பாதிப்பு
மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பால் இதுவரை 75 மருத்துவப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
கொங்கோ அதிகாரிகள் கடந்த மே 15 அன்று தான் இந்தத் தொற்றுப் பரவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆனால், அதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே இந்நோய் அங்கு பரவியிருக்கலாம் எனக் கருதப்படுவதால், எபோலா பாதிப்பு இருப்பதே தெரியாமல் பல மருத்துவப் பணியாளர்கள் தொடக்கத்தில் தகுந்த பாதுகாப்பின்றி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்துள்ளனர்.
பாதிப்பு
இதன் காரணமாகவே தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே கொங்கோ நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லாத நிலையில் (10,000 பேருக்கு 11 பணியாளர்கள் மட்டுமே), இந்தத் தொற்றுப் பரவல் அந்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பிற்கு மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது.
தற்போது அங்கு கையுறைகள், முகக்கவசங்கள் போன்ற அடிப்படைப் பாதுகாப்பு உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

சக பணியாளர்கள் அடுத்தடுத்து நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழப்பதைக் கண்டு அச்சமடைந்துள்ள மருத்துவப் பணியாளர்களுக்கு உலக சுகாதார அமைப்பு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க உதவும் வகையில் சீனா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் கொங்கோவிற்கு தங்கள் மருத்துவக் குழுக்களை அனுப்பி வருகின்றன.